செங்கடலில் அமெரிக்கக் கப்பல் மீது தாக்குதல்: மூவர் பலி!!


அமெரிக்காவின் வணிகக் கப்பல் மீது ஹவுதிகள் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் கப்பலில் பணியாற்றிய மூன்று மாலுமிகள் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஹவுதிகள் கப்பல்கள் மீது நடத்திவரும் தாக்குதல்களில் உயிரிழப்பு ஏற்பட்டது இதுவே முதற்தடைவையாகும்.

பார்படோஸ் கொடியுடன் சென்ற கப்பல் மீதே தாக்குதல் நடத்தப்பட்டது. கப்பலில் பெரும் தீ ஏற்பட்டது.

ஏமனின் ஏடன் நகருக்கு தென்மேற்கே 50 கடல் மைல் (93 கிமீ) தொலைவில் இந்த தாக்குதல் நடந்ததாக கப்பலின் உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்களின் செய்தி தொடர்பாளர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்

கப்பலில் ஒரு இந்தியர், நான்கு வியட்நாமியர்கள் மற்றும் 15 பிலிப்பைன்ஸ் பிரஜைகள் அடங்கிய 20 பேர் கொண்ட பணியாளர்கள் இருந்தனர். மூன்று ஆயுதமேந்திய காவலர்கள், இலங்கையைச் சேர்ந்த இருவர் மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த ஒருவரும் கப்பலில் இருந்தனர்.

காசாவில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே நடக்கும் போரில் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாகத் தங்கள் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ஹூதிகள் கூறுகின்றனர்.

மத்திய கிழக்கில் நடவடிக்கைகளை மேற்பார்வையிடும் அமெரிக்க மத்திய கட்டளை (சென்ட்காம்), மூன்று பணியாளர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் குறைந்தது நான்கு பேர் காயமடைந்தனர், இதில் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று தெரிவித்தது.

மாலுமிகளின் மரணம் சர்வதேச கப்பல்கள் மீது ஹூதிகள் பொறுப்பற்ற முறையில் ஏவுகணைகளை வீசியதன் சோகமான ஆனால் தவிர்க்க முடியாத விளைவு என்று யேமனில் உள்ள பிரித்தானியத் தூதரகம் கூறியது.

தாக்குதலைத் தொடர்ந்து, ஹூதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள செங்கடல் துறைமுக நகரமான ஹுதைதாவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தை குறிவைத்து அமெரிக்கா தலைமையிலான இரண்டு வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ஹூதிகளால் நடத்தப்படும் அல்-மசிரா தொலைக்காட்சி புதன்கிழமை மாலை தெரிவித்துள்ளது.

No comments