சுமந்திரன் தனியே தன்னந்தனியே!



சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் இலங்கையில் உள்ள அரசியல் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று கடந்த திங்கட்கிழமை ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்ற போது எம்.ஏ.சுமந்திரன் பங்கெடுத்தமை சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.

சந்திப்பில் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் பங்கேற்க மறுப்பு தெரிவித்த நிலையில், இலங்கை தமிழரசு கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் பங்கேற்றிருந்தார்.

இந்நிலையில், குறித்த சந்திப்பின் போது சர்வதேச நாணய நிதியத்தின் தொழில்நுட்ப பகுப்பாய்வு அறிக்கை தொடர்பான முக்கிய கேள்வியை சுமந்திரன் எழுப்பியதாக ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.

அதற்கமைய, குறித்த அறிக்கை இலங்கை தமிழரசு கட்சி மற்றும் நாடாளுமன்றத்தில் விரைவில் சமர்ப்பிக்கப்படுமென அவர் உறுதியளித்துள்ளார்.

அத்துடன், இலங்கை பொருளாதார நிலைத்தன்மையை அடைவதற்கான பாதை தொடர்பிலும் இந்த கூட்டத்தின் போது ஆராயப்பட்டதாக ரணில்; தனது உத்தியோகப்பூர்வ எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

எனினும், சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ சுமந்திரன் மாத்திரமே எதிர்க்கட்சிகள் சார்பில் பங்கேற்றிருந்ததோடு, கூட்டத்தில் பங்கேற்பதற்கான அனுமதியை தமிழரசுக் கட்சியின் தலைமையிடம் அவர் பெற்றிருக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments