கூட்டத்தில் கூடிநின்று கூவிப் பிதற்றலன்றி நாட்டத்தில் கொள்ளாரடி! பனங்காட்டான்

'முப்பது கோடி முகமுடையாள், உயிர் மொய்ம்புற ஒன்றுடையாள், இவள் செப்பும் மொழி பதினெட்டுடையாள், எனில் சிந்தனை ஒன்றுடையாள்"என்று இந்திய ஒருமைப்பாடு பற்றி மகாகவி பாரதி

பாடியதை நினைவில் கொண்டிருக்கும் ரணில் விக்கிரமசிங்க, நடிப்புச் சுதேசிகள் பற்றி அதே மகாகவி பாரதி எழுதிய 'நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறனுமின்றி வஞ்சனை செய்வாரடி! கூட்டத்தில் கூடிநின்று கூடிப் பிதற்றலன்றி நாட்டத்திற் கொள்ளாரடி!" என்ற வரிகளையும் நினைவிற் கொள்ள வேண்டும்.

இலங்கை அரசியல் பரப்பில் இரண்டு கட்சிகளின் தலைவர்கள் தங்கள் தரப்பில் வேகமாக காரியங்களை ஆற்றுகின்றனர். தமிழரசுக் கட்சியின் தலைவராகத் தெரிவாகியுள்ள சிவஞானம் சிறீதரன், ஜனாதிபதியாகவுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரே இவர்கள் இருவரும். 

மாவை சேனாதிராஜாவின் தலைமைக் காலத்தில் மூத்த தலைவர் சம்பந்தனின் ஆசிர்வாதத்துடன் தம்மிஷ்டப்படி இராஜதந்திரிகளையும், தூதரக அதிகாரிகளையும் சுமந்திரன் சந்தித்து வந்தார். தமிழரசுக் கட்சியினர் எவருக்கும் இச்சந்திப்புகளின் விபரங்கள் தெரிவிக்கப்படுவதில்லை. 

ஆனால், கட்சியின் புதிய தலைவரான சிறீதரன் சற்று வித்தியாசமாக தமது சந்திப்புகளை ஆரம்பித்துள்ளார். சட்டவாளராக இல்லாத, ஆங்கிலப் புலமை இல்லாத இவரை தலைவராக்கினால் கட்சியின் நிலை என்னாகும் என்று கேள்வி எழுப்பியவர்களுக்கு இவரது சந்திப்புகள் புதுமையாகவிருக்கும். இதுவரை இரண்டு வெளிநாட்டுத் தூதுவர்கள் இவரைச் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். 

தமிழரசுக் கட்சியின் நிறுவனர்களில் ஒருவரான தந்தை செல்வாவின் பேரனையும் இச்சந்திப்புகளில் சிறீதரன் இணைத்துக் கொள்வதானது கட்சியின் நற்பெயருக்கும் இவரின் வித்தியாசமான அணுகுமுறைமைக்கும் நல்ல உதாரணம். ஆரம்பமே பிளஸ் பொயின்ராக காணப்படுகிறது. 

இந்திய தூதரக அதிகாரிகளைச் சந்திப்பதற்கான ஏற்பாடும் இடம்பெறுவதாக தெரியவருகிறது. தீர்வைப் பற்றி பேசிக் கொண்டிருப்பது தீர்வாகாது, தீர்வைக் காண்பதற்கு தமிழர் தரப்பே முயற்சிக்க வேண்டுமென்று கடந்த வருடம் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வடக்கு - கிழக்கு தமிழ் அரசியல் பிரமுகர்களிடம் நேரடியாகத் தெரிவித்தது சிறீதரனுக்கு ஞாபகம் இருக்கும். 

ரணில் அரசுடன் பேசி தீர்வைக் காண தமிழர் தரப்புத்தான் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் ஜெய்சங்கர் கூறியிருந்தார். இது விடயத்தில் இந்தியா நேரடியாகத் தலையிட முடியாது என்று கூறிய இவர், அதிகாரப்பகிர்வுக்கு இந்தியா முழுமையாக ஆதரவு வழங்குமென்று தெரிவித்ததைப் புரிந்து கொண்டு சிறீதரன் தமது நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய நிலையிலுள்ளார். 

நிலைமை இவ்வாறிருக்கையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமிழர் பிரச்சனைத் தீர்வை முற்றாக மறந்து விட்டவர் போன்று தமது காரியங்களை ஆற்றி வருகிறார். முக்கியமாக, கடந்த வாரம் நிகழ்த்திய கொள்கை விளக்கப் பிரகடனத்தில் தமிழர் பிரச்சனைத் தீர்வு தொடர்பாக மறந்தும்கூட



ஒருவரிதானும் தெரிவிக்காததையிட்டு தமிழர் தரப்பு விசனமடைந்துள்ளது. சிலர் தங்கள் உரைகளிலும் இதனைச் சுட்டிக்காட்டியுள்ளனர். 

2022 நடுப்பகுதியில் ஜனாதிபதிப் பதவியை ஏற்றதும், தமிழர் பிரச்சனைத் தீர்வு விடயத்தில் மற்றெல்லோரையும்விட தாமே அதீத அக்கறை கொண்டவர் போன்று காட்டிக் கொண்டார். தமிழர் தரப்புடன் பேச்சுவார்த்தையையும் ஆரம்பித்தார். பிரச்சனைக்கான விடயங்களை - ஏதோ தமக்கு எதுவும் தெரியாதவர் போன்று எழுத்தில் சமர்ப்பிக்குமாறு தமிழ்ப் பிரதிநிதிகளிடம் கேட்டுக் கொண்டார். 

கடந்த ஆண்டு (2023) சுதந்திர தினமான பெப்ரவரி 4ஆம் திகதிக்கு முன்னதாக தமிழர் பிரச்சனைக்கான தீர்வை அறிவிக்கப் போவதாக சொன்னார். அப்படி எதுவும் நடக்கவில்லை. அதன் பின்னர் முழுமையாக ஒரு வருடம் கடந்து விட்டதாயினும் செயலளவில் எதனையும் காணவில்லை. இதன் பின்னர் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் சறுக்கலாகவே முடிந்தன. அவரது பாணியில் சொல்வதானால் சும்மா ஒரு சந்திப்பாகவே இவை இடம்பெற்றன. 

2024ல் ஜனாதிபதித் தேர்தல் என்று அறிவித்துவிட்டு வடக்கே போன ரணில் அங்கிருந்துதான் தமது தேர்தல் பணிகளை ஆரம்பித்தார். இங்கு அவரால் வீசப்பட்ட உறுதிமொழிகள் அவரது தேர்தல் விஞ்ஞாபனமாக தோற்றமளித்தன. சர்வதேசத்தை விளித்து ஆற்றும் உரைகளின்போதும் இவ்விடயங்களையே சுட்டி வருகிறார். 

இலங்கையிலுள்ள அரசியல் தலைவர்களுள் ரணில் என்ற பெயரே சர்வதேச அரங்கில் நம்பகத்தன்மை கொண்டதாக இருப்பதாகவும், அதனாலேயே அவர் ஏந்திச் செல்லும் பிச்சா பாத்திரத்தை வெளிநாடுகளும் சர்வதேச அமைப்புகளும் நிரப்பி விடுவதாகவும் சொல்லப்படுகிறது. இதில் உண்மையில்லாமல் இல்லை. 

45 ஆண்டுகளுக்கு மேலாக அரசியலில் அறாத்தொடராக இருக்கும் ஒரு புள்ளி இவர். பல தடவைகள் பிரதமராக இருந்தவர். நான்கு தசாப்தங்களில் பல முக்கிய அமைச்சுப் பதவிகளை வகித்தவர். தற்போது நாட்டின் ஜனாதிபதி. எல்லாவற்றுக்கும் மேலாக ஊழலற்ற அரசியல்வாதி என்ற நன்மதிப்பும் இவருக்குண்டு. 

இவ்வாறு சர்வதேசம் ரணிலைப் பார்த்து அதன்வழியாக ஒரு வியூகம் அமைக்கப்பட்டுள்ளது என்று நான் கூறவில்லை. இலங்கையில் பணிபுரியும் முக்கியமான வெளிநாட்டுத் தூதுவர் ஒருவரின் கருத்து இது. 

இந்தத் தூதுவர் சில மாதங்களுக்கு முன்னர் தமது சொந்த நாட்டுக்கு விடுமுறையில் சென்றிருந்தார். அவ்வேளை அந்நாட்டில் வாழும் ஈழத்தமிழர்களின் முக்கியஸ்தர்கள் சிலரையும், தமிழர் அமைப்புகளின் பிரதிநிதிகளையும் சந்தித்து உரையாற்றியுள்ளார். பலதும் பத்துமாக உரையாடி இவர்களின் நாடியை அவர் பிடித்துப் பார்த்தாரென்றே சொல்ல வேண்டும். 

இந்தச் சந்திப்புகளின்போது அந்த இராஜதந்திரி முக்கியமான விடயங்களை தமக்கேயுரிய இராஜரீக மொழியில் தெரிவித்ததன் சாராம்சம் பின்வருமாறு அமைந்திருந்தது:

'இலங்கையின் அரசியல் தலைவர்களுள் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஒரு தனியிடம் அல்லது சிறப்பான மரியாதையை பூகோள அரசியலில் காணமுடிகிறது. இவருடைய பதவிக் காலத்தில் தமிழர் பிரச்சனைக்கு ஏதாவது வகையில் தீர்வு காண முடியாவிடின், அதன் பின்னர் வேறு எவராலும் தீர்வு வழங்க முடியுமென்பது சந்தேகம். எதிர்காலத்தில் அரசியலில் தலைமை தாங்க இருப்பவர்கள் பலரும் இலங்கையில் இனப்பிரச்சனை என்ற ஒன்று இல்லை என்ற பாணியில் இயங்குபவர்கள். எனவே ஏதாவது வழியில் ரணிலின் காலத்தில் கிடைக்கக்கூடிய ஒரு தீர்வைப் பெற தமிழர் தரப்பு முன்வந்து செயற்பட வேண்டும்" என்பதே இந்த இராஜதந்திரியின் கருத்தாகக் காணப்பட்டது. 

பேசிக் கொண்டேயிருப்பது தீர்வாகாது, பேச்சுவார்த்தை மூலம் தீர்வைக் காண தமிழர் தரப்பே செயற்பட வேண்டுமேன்று இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தமைக்கும், புலம்பெயர் தமிழர்களைச் சந்தித்து உரையாடிய ஒரு தூதுவரின் கருத்துக்குமிடையில் மெல்லியதான ஓர் ஒற்றுமை இருப்பதை கூர்மையாக நோக்கின் காண முடியும். 

இவ்வாறுதான் சர்வதேசம் தமிழர் பிரச்சனைத் தீர்வைப் பார்க்கிறதெனின், தமிழரசுக் கட்சியின் புதிய தலைமைக்கு பாரிய பொறுப்பு ஆரம்பத்திலேயே சுமத்தப்பட்டு விட்டது. ரணில் கடந்தவார கொள்கை விளக்க உரையில் தமிழர் பிரச்சனை தீர்வு பற்றி எதுவுமே கூறாது விட்டதை தற்செயலானதாகப் பார்க்க முடியவில்லை. இதுவரை தாம் கூறிய எதனையும் செய்யவில்லையென்பது அவருக்குத் தெரியாததல்ல. இதனால் இனிமேல் கூறப்போகின்றவைகளை தமிழர் நம்பத் தயாரில்லை என்பது அவருக்குத் தெரியும். எனவே எதனையுமே கூறாமல் விடுவது இப்போதைக்கு நல்லது என அவர் எண்ணியிருக்கலாம். 

'2022 பெப்ரவரியில் நாடு இருந்த நிலை அனைவருக்கும் நினைவிலிருக்கும். 2023 பெப்ரவரி மாதமளவில் நாட்டை சிறந்த நிலைக்குக் கொண்டுவர முடிந்தது. இந்த வருடம் பெப்ரவரி ஆகும்போது மேலும் சிறந்த நிலைக்கு நாடு முன்னேறியுள்ளது" என்ற ரணிலின் கொள்கை விளக்க உரையின் வரிகள், அவர் இனப்பிரச்சனைத் தீர்வினைவிட பொருளாதார பிரச்சனைத் தீர்வையே முக்கியமானதாகவும் முதன்மையானதாகவும் பார்க்கிறார் என்பதைச் சுட்டுகிறது. 

'அரசியல் ஆதாயத்துக்காக நான் ஒருபோதும் முடிவுகளை எடுக்கவில்லை. ஒவ்வொரு முடிவையும் நாட்டின் நலன் கருதியே எடுத்தேன்" என்ற வரிகள்கூட நாட்டின் பொருளாதாரத்தின்மீது அவர் காட்டும் அக்கறையை மட்டுமே எடுத்துக் காட்டுகிறது. 

இறுதியாக, பத்தொன்பதாம் நூற்றாண்டில் மகாகவி பாரதி இந்தியா பற்றி எழுதிய கவிதை ஒன்று தமது நினைவுக்கு வருவதாகக் கூறி அதனை தனது கொள்கை விளக்க உரையில் பின்வருமாறு ரணில் வாசித்தார்:

'முப்பது கோடி முகமுடையாள்
உயிர் மொய்ம்புற ஒன்றுடையாள்
இவள் செப்பும் மொழி பதினெட்டுடையாள்
எனில் சிந்தனை ஒன்றுடையாள்" 

என்று இந்திய ஒருமைப்பாடு பற்றி மகாகவி பாரதி பாடியதை நினைவில் கொண்டிருக்கும் ரணில் விக்கிரமசிங்க, நடிப்புச் சுதேசிகள் பற்றி அதே மகாகவி  பாரதி எழுதிய பின்வரும் வரிகளையும் படித்து நினைவிருத்த வேண்டும்:

'நெஞ்சில் உரமுமின்றி
நேர்மைத் திறனுமின்றி
வஞ்சனை செய்வாரடி!
கூட்டத்தில் கூடிநின்று
கூடிப் பிதற்றலன்றி
நாட்டத்திற் கொள்ளாரடி!"

ஆண்டாண்டு காலம் ஓரினத்தை அடிமைப்படுத்தி ஆட்சி புரியும் அரசியல்வாதிகளுக்கான பாரதியின் சமர்ப்பணம் இது. 


No comments