பாலம் போட இடம் சரியா?



இலங்கைக்கும் இந்தியாவிற்குமிடையில் பாலம் நிர்மாணிப்பது பற்றிய ஆய்வுகள் மத்தியில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் மன்னார் திட்டிகளிற்கு பயணித்துள்ளார்.

வடக்கிற்கு விஜயம் செய்துள்ள அவர், மன்னார் மணல் திட்டிகளில் உள்ளதாக கூறப்படும் இராமர் சேதுவுக்கு விஜயம் செய்து, இந்தியா-இலங்கை உறவுகளின் நல்வாழ்வுக்காக பிரார்த்தனை செய்ததாக யாழப்பாணத்திலுள்ள துணைதூதரகம் அறிவித்துள்ளது.

அத்துடன் திருகேதீஸ்வரத்திலும் வழிபாடுகளில் ஈடுபட்ட அவர், மன்னார் மடு தேவாலயத்துக்கும் விஜயம் செய்ததாக கூறப்படுகின்றது. 

இதனிடையே நெடுந்தீவுக்கு அண்மித்த கடற்பரப்பில் அத்துமீறி உள்நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் கடந்த 03ஆம் திகதி கைது செய்யப்பட்ட 20 இந்திய கடற்றொழிலாளர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் இன்றையதினம்(16)வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

அதன்போது 5 வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட 18 மாத சிறைத்தண்டனை என்ற நிபந்தனைகளுடன் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

மேலும், இரண்டு படகுகளின் ஓட்டுனர்களுக்கும் ஆறு மாத கால சிறைத் தண்டனை வழங்கப்பட்டதுடன், 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒரு வருட சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.

அத்துடன் கடற்றொழிலாளரகளுள் ஒருவர் நீதிமன்ற எச்சரிக்கையினை தாண்டி  இரண்டாவது தடவையும் எல்லை தாண்டி வந்ததனால் அவருக்கு ஒரு வருட கால சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.

விடுதலை செய்யப்பட்ட கடற்றொழிலாளர்கள்  சட்டரீதியான நடவடிக்கைகளை நிறைவுற்ற பின்னர் இந்தியாவிற்;கு திருப்பி அனுப்பப்படவுள்ளனர்.


No comments