மகிந்த மரணிக்க முன்னர் பெயர் மாற்றவேண்டும்!



வருமானமே அற்ற ராஜபக்ச குடும்பம் எப்படி இவ்வளவு சொகுசாக வாழ்கின்றது. ராஜபக்ச, மகிந்த ராஜபக்ச என்று சொன்னாலே நாட்டுக்கு தரித்திரம். அவர்களது பெயரைக் கூட சொல்லக் கூடாது என முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, மகிந்த ராஜபக்ச மரணிப்பதற்கு முன்னர் அவரது பெயரை அபிவிருத்தித் திட்டங்களில் இருந்து நீக்க வேண்டும். அவரது அநியாயங்கள் தான் கோட்டாபய ராஜபக்ச இல்லாமல் போனதற்கு காரணம் எனவும் அசாத் சாலி சாடியுள்ளார்.

இது தொடர்பாக மேலும் கூறிய அவர், “2005இல் இருந்து மகிந்த ராஜபக்ச செய்த அநியாயங்கள் எவ்வளவு. 2005இல் இருந்து மகிந்த ராஜபக்ச செய்த அநியாயங்கள் தான் கோட்டாபய ராஜபக்ச இல்லாமல் போனதற்கு காரணம்.

கப்பல் வராத ஒரு துறைமுகம், விமானம் வராத ஒரு விமான நிலையம், போட்டிகள் இடம்பெறாத ஒரு விளையாட்டு மைதானம் உள்ளிட்டவைகள் கடன் பெற்று அமைக்கப்பட்டுள்ளன.

உலகத்தில் எந்தவொரு நாட்டிலும் நடைபெறாத ஒன்றுதான் எங்களுடைய அதிவேக நெடுஞ்சாலைகள். எந்தவொரு நாட்டிலும் ஒரு நெடுஞ்சாலைக்கு செலவு செய்யப்படாத தொகைதான் மகிந்த ராஜபக்சவின் காலத்தில் செலவு செய்யப்பட்டது.

இவை அனைத்திற்கும் யார் ஒரு தீர்வு கொண்டு வருவது. மகிந்த ராஜபக்ச மரணிப்பதற்கு முன்னர் ஒரு விசாரணைக்குழு கொண்டு வரவேண்டும். மகிந்த மரணிக்க முன்னர் ஒரு குழுவை அமைத்து இந்த மைதானம், விமான நிலையம், துறைமுகம் போன்றவற்றில் இருந்து மகிந்தவின் பெயரை நீக்க வேண்டும்.


No comments