இயக்குனரும் நடிகருமான மாரிமுத்து காலமானர்


பிரபல இயக்குனரும், நடிகருமான மாரிமுத்து இன்றைய தினம் காலை மாரடைப்பால் காலமானார். 

பிரபல இயக்குநரும், ‘ஜெயிலர்’ உட்பட பல திரைப்படங்களில் நடித்து வந்த நடிகருமான மாரிமுத்து இன்று காலை, டப்பிங் பேசிக் கொண்டிருக்கும் போது, திடீர் மாரடைப்பால் காலமானார்.

நடிகர், இயக்குநர் மாரிமுத்துவின் திடீர் மரணம் திரையுலகினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

தொலைக்காட்சி தொடர்களில் கலக்கி வரும் பிரபல நடிகரான மாரிமுத்து இயக்குனர் வசந்த் மற்றும் எஸ்.ஜே.சூர்யாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார்.

 பின்னர் கடந்த 2008-ஆம் ஆண்டு 'கண்ணும் கண்ணும்' 2014-ஆம் ஆண்டு 'புலிவால்' உள்ளிட்ட 2 படங்களை இயக்கினார். இந்த இரண்டு படங்களும் கைக்கொடுக்காததையடுத்து நடிகராக களமிறங்கினார்.

 இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான 'யுத்தம்' செய் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான இவர் பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

சமீபத்தில் வெளியான 'ஜெயிலர்' திரைப்படத்தில் இவரின் கதாபாத்திரம் பாராட்டை பெற்றது. 

இந்நிலையில், நடிகர் மாரிமுத்து இன்று மாரடைப்பால் காலமானார். இவரது மறைவு திரைத்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவருக்கு பிரபலங்கள் பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

No comments