கீரிமலையில் கொள்ளையடிக்கப்பட்ட மோட்டார் சைக்கிளே உரும்பிராயில் தீக்கிரை


யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் வீதியில் எரியூட்டப்பட்ட மோட்டார் சைக்கிள் , காங்கேசன்துறை பகுதியில் கொள்ளையடிக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் என தெரியவந்துள்ளது. 

யாழ்ப்பாணம் - பலாலி வீதியில் உரும்பிராய் சந்திக்கு அண்மையில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை அதிகாலை மோட்டார் சைக்கிள் ஒன்று முற்றாக தீக்கிரையான நிலையில் காணப்பட்டது. 

அது குறித்து கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர். 

இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கோண்டாவில் பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நண்பனை போன்று உறவாடி கீரிமலை நல்லிணக்கபுரம் பகுதி ஒருவர் அழைத்துள்ளார். 

அங்கு இளைஞன் சென்ற போது கும்பல் ஒன்று வாள் வெட்டு தாக்குதலை நடாத்த தயாரான போது , இளைஞன் மோட்டார் சைக்கிளை கைவிட்டு தப்பி ஓடியிருந்தார். 

அதனை அடுத்து மோட்டார் சைக்கிளை அக்கும்பல் அபகரித்து சென்று இருந்தது. அது தொடர்பில் மோட்டார் சைக்கிள் உரிமையாளரான இளைஞன் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்த நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர். 

இந்நிலையில் கீரிமலை பகுதியில் கொள்ளையடிக்கப்பட்ட மோட்டார் சைக்கிளே உரும்பிராய் பகுதியில் தீக்கிரையான நிலையில் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

No comments