இனி நாகையிலிருந்து கப்பலாம்?

 


இந்தியாவின் நாகை – இலங்கை இடையே பயணிகள் படகு போக்குவரத்துக்கு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இந்திய பிரதமர்நரேந்திர மோடி,  ஜனாதிபதி ரணில் முன்னிலையில் இரு நாடுகளிடையே 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இந்நிலையில் நாகையில் இருந்து இலங்கையில் உள்ள காங்கேசன்துறைக்கு பயணிகள் படகு இயக்கப்பட உள்ளது. 

 ஜனாதிபதி  ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்பிற்கு பின்னர் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஊடகசந்திப்பில்   கூறியதாவது:

”கடந்த ஆண்டில் இலங்கை பல்வேறு சவால்களை சந்தித்தது. அண்டை நாடுகளுக்கு முதல் முக்கியத்துவம் என்ற கொள்கையை இந்தியா கொண்டுள்ளது. அதன் அடிப்படையில் இந்தியாவிற்கு இலங்கை மிக முக்கியமான நாடாகும். மேலும் கடல் வழி போக்குவரத்து, விமான வழி போக்குவரத்து, எரிசக்தி வர்த்தகம், சுற்றுலாத்துறை திறன் மேம்பாடு என அனைத்து துறைகளிலும் இரண்டு நாடுகளின் உறவு மிக முக்கியம்.

நீண்ட நாள் கண்ணோட்டத்தின் அடிப்படையில் இந்தியா இலங்கை உறவு உள்ளது. தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் முதல் இலங்கையின் காங்கேசன்துறை இடையே பயணிகளுக்கான கப்பல் போக்குவரத்து தொடங்குவதற்கான பணி நடந்து வருகிறது.

இந்தியாவின் UPI பணப்பரிவர்த்தனை சேவையை இலங்கையில் தொடங்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. இலங்கைத் தமிழர் நலனுக்காக இந்தியா சார்பில் ஏராளமான நலத்திட்ட பணிகள் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

🚨ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  கருத்து தெரிவிக்கையில், 

கடந்த ஆண்டில் இலங்கை பொருளாதாரம், சமூகம் மற்றும் அரசியல் ரீதியாக சந்தித்த அசாதாரண சவால்களை பிரதமர் மோடியிடம் நான் விவாதித்தேன். பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கைக்கு உறுதுணையாக இருந்த இந்தியாவுக்கு நன்றி.

 ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் நான் இந்தியாவுக்கு முதல் முறையாக வருகை தந்திருக்கும் நிலையில், இந்த பயணம் எனக்கும், எனது அரசுக்கும் மிக முக்கியமான பயணம் என்றே கூறவேண்டும். இந்த பயணத்தின் போது எனக்கும், எனது குழுவினருக்கும் உபசரிப்புக்களை வழங்கிய பிரதமர் மோடிக்கும், இந்திய அரசுக்கும் நன்றி தெரிவிக்க கடமைபட்டுள்ளோம்.

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் மேம்படுத்தப்பட்ட பொருளாதார, உள்கட்டமைப்பு, தொழில்நுட்ப முன்னேற்றங்களைப் பாராட்டிய ஜனாதிபதி, இந்தியாவின் வளர்ச்சி அயல் நாடுகள் மற்றும் இந்து சமுத்திர வலய நாடுகளுக்கு சாதகமான தன்மையை ஏற்படுத்தும்.

இலங்கையின் அண்மைக்கால நிலைமைகளை மீளாய்வுச் செய்யும் போது, நாட்டின் அனைத்து பகுதிகளிலும் வாழும் இலங்கையர்களின் அனைத்து சமூகங்களுக்கும் பலன் கிட்டும் வகையில், நீதி, நியாயத்துடனான நிலையான, ஸ்திரமான அபிவிருத்தியை நோக்கிய பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்கான எனது அர்ப்பணிப்புக்களை பிரதமர் மோடிக்கு எடுத்துரைத்துள்ளேன்.

மறுசீரமைப்பு, அதிகாரப் பகிர்வு, அதிகார பரவலாக்கம், வடக்கு அபிவிருத்தித் திட்டத்தின் பலதரப்பட்ட விடயங்களை தொடர்ந்தும் முன்னேடுத்துச் செல்வதற்காக நான் முன்வைத்த பரந்துபட்ட யோசனை குறித்து கருத்துக்களையும் நான் அவருடன் பகிர்ந்துகொண்டேன். இந்த பணிகள் குறித்து இணக்கப்பாட்டுடன், தேசிய ஒற்றுமைக்காக பணியாற்றுமாறு நான் பாராளுமன்றத்தின் அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளேன். இந்த முயற்சிகளின் போது, பிரதமர் மோடி அவர்கள், தனது ஒத்துழைப்பையும், ஆதரவையும் வெளிப்படுத்தியுள்ளார்.

நாம் தற்போது எமது பொருளாதாரத்தை, நாட்டிற்கு அதிக வருமானத்தை ஈட்டித் தருவதும், நாட்டின் அனைத்துப் பிரதேசங்களுக்கும் மேம்படுத்தப்பட்ட முதலீட்டு வாய்ப்புக்களை வழங்குவதற்கும் அவசியமான அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்ல வேண்டும்.

இரு நாடுகளுக்கும் இடையில், பல தசாப்தங்கள் பழமையான நாகரிகம், கலாசார, மானிட மற்றும் வர்த்தக நடவடிக்கைகளின் போதான உள்ளகச் செயற்பாடுகள், வாயிலாக எமது ஒன்றிணைந்த நோக்குக்கான அடித்தளம் உருவாகியுள்ளது.

எமது உறவுகள் என்ற நூள் வரலாற்றிலிருந்தே பிரித்தெடுக்கப்பட்டுள்ளது. எமது எதிர்கால இலக்குகளுக்கான ஆரம்பத்திற்கு நிகழ்காலமே மிகச் சிறந்த தருணமாகும்.

🚨 யாழ்ப்பாணம்- சென்னை விமான சேவை  முக்கிய மைல்கல்லாகும். - ஜனாதிபதி

பொருளாதாரப் பங்காளித்துவத்தின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதில் நவீன இணைப்பு முக்கியப் பங்காற்றுகிறது. அண்மையில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட சென்னை மற்றும் யாழ்ப்பாண விமானச் சேவைகள், இரு நாடுகளுக்கும் இடையிலான விமான இணைப்பில் ஒரு முக்கிய மைல்கல்லாகும். இரு நாடுகளுக்குமிடையில் விமான சேவைகளையும், கப்பல் சேவைகளைகளையும் மேம்படுத்த உடன்பாடு காணப்படுகிறது. அது சுற்றுலா மற்றும் கலாசார உறவுகளை வலுப்படுத்தும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

தலைமன்னார் – ராமேஸ்வரம் மற்றும் நாகபட்டினம் – காங்கேசன்துறை ஆகிய பகுதிளுக்கிடையிலான படகு சேவை இரு நாடுகளுக்கான கடல்வழிப் போக்குவரத்துக்கு வலு சேர்க்கும். இலங்கை மற்றும் இந்திய உறவுகளுக்கான வேறு வழிமுறைமைகள் தொடர்பில் ஆராய்வதும் பொருளாதார வளர்ச்சிக்கு மற்றுமொரு வலுவாக அமையும்.

புதிய மற்றும் முன்னுரிமை வழங்க வேண்டிய துறைகளுக்கு இருதரப்பு பொருளாதாரம் மற்றும் முதலீடுகளை மேம்படுத்துவதற்காக இலங்கை மற்றும் – இந்தியா பொருளாதார ஒத்துழைப்பு உடன்படிக்கை மிகவும் முக்கியமானது என்ற விடயத்திற்கு நாம் இணக்கம் தெரிவித்துள்ளோம். டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக சேவை வழங்கல் மற்றும் தனி நபர்களை மையப்படுத்திய சேவைகளுக்கான இந்தியாவின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள இலங்கை ஆர்வமாக உள்ளது.

பசுமை பொருளாதாரத்திற்கு இலங்கையின் தேசிய முக்கியத்துவம் உலக அர்பணிப்புக்களுக்கு இணங்க வலுசக்தி பாதுகாப்பை உறுதி படுத்துவதற்காகவும், பசுமை மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி வலுவூட்டலுக்கான இந்தியாவுடன் கைகோர்த்துக்கொள்வது பெறுமதியான வாய்ப்பு என இலங்கை கருதுகிறது. இந்த சந்தர்ப்பத்தில் மீள்புதுப்பிக்கத்தக்க சக்திக்கான துறைசார் புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பிலும் வலியுறுத்துகிறேன். இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான அதிக வலுவுடனான மின் பரிமாற்ற தொடர்பு கட்டமைப்பு ஒன்றை நிறுவினால் இருநாடுகளுக்கும் இடையிலான இருவழிப்பாதை மின் வர்த்தகத்திற்கான வழியை ஏற்படுத்தும்.

இந்தியாவின் ஒத்துழைப்போடு, திருகோணமலை இலங்கையின் வலுசக்தி மையமாக அபிவிருத்தி செய்தல் மற்றும் தொழிற்சாலைகள் மற்றும் ஏனைய பொருளாதார நடவடிக்கைகள் தொடர்பிலான மையமாகவும் திருகோணமலையை மேம்படுத்துவது தொடர்பிலான இலங்கையின் இலக்கு முக்கியமானதாகும்.

பிரதமர் மோடி மற்றும் நான் நம்பிக்கை கொண்டுள்ள வகையில், இந்தியாவின் தெற்கு பகுதியிலிருந்து இலங்கை வரையிலான பல்துறைசார் பெற்றோலிய குழாய் கட்டமைப்பொன்றை உருவாக்குவதால், இலங்கையினால் வழங்கக்கூடிய உறுதியான வலுசக்தி விநியோகத்தை உறுதிப்படுத்த முடியும் என்பதே பிரதமர் மோடியினதும் எனதும் எதிர்பார்ப்பாகும்.

சமூக – பொருளாதார அபிவிருத்தியின் அதிகமான இலக்குகளை அடைந்துகொள்வதற்கான எமது பொது முயற்சியை வெற்றிகொள்வதற்காகவும், எமது மக்களின் போஷாக்கு நிலைமையை மேம்படுத்துவதற்கான பால் உற்பத்தி மற்றும் கால்நடை துறைகளில் எமது ஒத்துழைப்புக்களை மேம்படுத்திக்கொள்வது தொடர்பிலும் கலந்தாலோசித்தோம்.

கல்வித்துறையின் ஒத்துழைப்பு எமது இருதரப்பு உறவுகளின் முக்கிய அம்சமாக காணப்படுகிறது. இந்திய உதவியுடன் இலங்கைக்குள் புதிய உயர்கல்வி நிறுவனங்களை நிறுவுவது முக்கியமானதென நம்புகிறோம். இதனால் எமது இளைஞர், யுவதிகளில் அறிவு மற்றும் திறன்களை மேம்படுத்த முடியும் என்பதோடு அவர்களை தேசிய அபிவிருத்தி பொறிமுறைக்குள் உள்வாங்கப்படுவர்.

இன்று நாம் நடத்திய கலந்துரையாடல் இலங்கை – இந்தியாவின் அடுத்த 25 வருடங்களுக்கான அடித்தளத்தை இடும் என்றும், இலங்கை அனைத்து சமூக குழுக்களினதும் நிலையான அபிவிருத்தி மற்றும் தேசிய ஒருமைப்பாடு இலங்கையின் அனைத்து சமூகத்தினர் மத்தியிலுமான நல்லிணக்கம் மற்றும் இலங்கை மக்களுக்கு சுபீட்சமான மற்றும் பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்குவதற்கான எனது நோக்கத்திற்கு உதவும் என நம்புகிறேன்.’’ என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

No comments