மட்டக்களப்பில் 30க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் தீக்கிரை


மட்டக்களப்பு – வாழைச்சேனை, கறுவாக்கேணி வீதியில் அமைந்துள்ள தனியார் வாகன தரிப்பிடமொன்றில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை தீ விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது 30இற்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களும் 8 சைக்கிள்களும் தீக்கிரையானதாக கூறப்படுகிறது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பணியாற்றும் வாழைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த அரச மற்றும் தனியார் பணியாளர்கள், மாணவர்கள் இந்த இடத்தில் வாகனங்களை நிறுத்தி விட்டு பஸ்ஸில் பயணிப்பது வழக்கமாகும்.

அவர்கள் வழமை போன்று நேற்றைய தினமும் வாகனங்களை நிறுத்திவிட்டு பணிக்கு சென்றிருந்த போது திடீரென தீ பரவியுள்ளதுடன் இதனால் பெறுமதி வாய்ந்த தமது மோட்டார் சைக்கிள்கள் தீயில் எரிந்து சாம்பலானதாக பாதிக்கப்பட்டோர் கவலை வெளியிட்டுள்ளனர்.

வாகன உரிமையாளர்கள் தங்களது வாகனங்களை அடையாளம் கண்டு வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளதுடன் வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.



No comments