பௌத்த மதத்தை விமர்சிக்கும் உரிமை எவருக்கும் கிடையாது


பௌத்த மதத்தை விமர்சிக்கும் உரிமை இங்கு எவருக்கும் கிடையாது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “பௌத்த மதத்தை விமர்சிக்கும் உரிமை இங்கு எவருக்கும் கிடையாது.

மொழிகளும் மதங்களும் வேறுப்பட்டாலும் ஒவ்வொரு மதங்களையும் மதிக்க மனிதர்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும்.

இதன் ஊடாக அரசியல் செய்ய பலரும் முயற்சிக்கிறார்கள். கடந்த காலங்களில் எல்லாம் இதுபோன்ற பல வரலாறுகள் காணப்படுகின்றன.

என்னைப் பொறுத்தவரை மொழி அல்லது மத அடையாளம் கொண்ட அரசியற் கட்சிகளை பதிவு செய்வதை தடைசெய்யும் வகையில் அரசமைப்பில் திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும்.

தேர்தல் ஆணைக்குழுவும் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அப்போது மட்டுமே இவ்வாறான வெறுப்புப் பிரசாரங்களின் ஊடாக அரசியல் செய்யும் கலாசாரத்தை நாட்டிலிருந்து இல்லாது செய்ய முடியும்.

வெறுப்புப் பிரசாரங்களை செய்யும் நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து அடிப்படைவாதிகளால் நிதி அனுப்பப்படுகிறது.

இதனைக் கண்டறிந்து முதலில் அரசாங்கம் நிறுத்த வேண்டும். புலனாய்வுப் பிரிவினர் இதனைக் கண்டறிய வேண்டும்.

நல்லிணக்கம், ஜனநாயகம், மனிதாபிமானத்தை உறுதிப்படுத்தினாலேயே ஒரு நாட்டை முன்னேற்ற முடியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் குறிப்பிட்டார்.

No comments