திருமணத்திற்கு தைக்க கொடுத்த ஆடைகளை திருமணம் முடிந்தும் கொடுக்காத தையலாளர்; புது மாப்பிள்ளை மீது தாக்குதல்!




திருமணத்திற்கு தைக்க கொடுத்த ஆடைகளை , திருமணம் முடிந்தும் தைத்து கொடுக்காத தையலாளரிடம் ஆடைகளை திருப்பி கேட்ட மணமகன் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, 

சாவகச்சேரி பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் தனது திருமணத்திற்காக அப்பகுதியில் உள்ள தையலகம் ஒன்றில் ஆடைகளை தைக்க கொடுத்து இருந்தார். 

தையலாளர் ஆடைகளை சொன்ன திகதிக்கு தைத்து கொடுக்காமல் காலம் கடத்தி வந்த நிலையில் , ஒரு கட்டத்தில் இளைஞனுக்கும் திருமணம் நடந்து முடிந்து விட்டது. 

இந்நிலையில் தனது மனைவியுடன் சென்றாவது தைக்க கொடுத்த ஆடைகளை வாங்குவோம் என நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை தையலகத்திற்கு சென்ற போது , அப்பவும் அவரது ஆடைகள் தைக்கப்படவில்லை. 

அதனால் இளைஞனுக்கும் தையலாளருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டதனை அடுத்து , கடையில் இருந்த தும்புத்தடியினால் , இளைஞனை, அவரது மனைவி கண் முன்  தையலாளர் தாக்கியுள்ளார். 

அதில் காயமடைந்த இளைஞன் வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற சென்ற போது , தன்னையும் இளைஞன் தாக்கியதாக தெரிவித்து, தையலாளரும் சிகிச்சைக்காக என வைத்தியசாலையில் அனுமதியாகியுள்ளார். 

No comments