வவுனியாவை சேந்தவரை வானில் யாழ்ப்பாணம் கடத்தி வந்த பெண்கள் உள்ளிட்ட 11 பேர் கைது


வவுனியாவைச் சேர்ந்த நபர் ஒருவரை, யாழ்ப்பாணம் கடத்தி வந்து வீடொன்றில் அடைத்து வைத்து சித்திரவதை செய்த குற்றச்சாட்டில் 3 பெண்கள் உள்பட 11 பேர் யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால், நேற்றைய தினம் திங்கட்கிழமை  கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட "ஹயஸ்" வான் ஒன்றும் மற்றும் 3 மோட்டார் சைக்கிள்களும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

 சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, 

வவுனியா பூவரசம்குளம் பகுதியை சேர்ந்த முச்சக்கர வண்டி சாரதியான 34 வயதுடைய தில்லைநாதன் சுமணன் என்பவர் வெளிநாடு அனுப்புவதாக கூறி வேலணையைச் சேர்ந்தவரிடம் 10 லட்சம் ரூபா பணத்தை வாங்கியுள்ளார். 

எனினும் நீண்ட நாள்களாக வெளிநாடு அனுப்புவதற்கான நடவடிக்கையை அவர் எடுக்கவில்லை.

அவருக்கு பணம் கொடுத்தமைக்கு, வேலணையை சேர்ந்தவரிடம்  எந்தவித ஆதாரமும் இல்லாததால் ஆதரத்தை உருவாக்குவதற்காக குறித்த நபரை கடத்தி வந்துள்ளனர்.

வவுனியாவுக்கு நேற்றைய தினம் திங்கட்கிழமை சென்ற கும்பல், முச்சக்கர வண்டி வாடகைக்கு வேண்டும் என்று கூறி, அக்கும்பலை சேர்ந்த இரண்டு இளம் பெண்கள் அவரை தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு ஒரு இடத்திற்கு வரவழைத்துள்ளனர். 

அவர்கள் அழைத்த இடத்துக்குச் சென்ற போது முச்சக்கர வண்டியை அங்கு வாகனத்துடன் தயார் நிலையில் நின்ற, 10 பேர் கொண்ட கும்பல் அவரை அடித்து ஹயஸ் வானின் ஏற்றி யாழ்ப்பாணத்துக்கு கடத்தி வந்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் கொக்குவில் தாவடி எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு முன்பாக உள்ள வீட்டில் அடைத்து வைத்து மிரட்டி. அடித்து சித்திரவதை புரிந்து, 10 லட்சம் தர வேண்டும் என்று கடிதம் ஒன்றை எழுதி வாங்கியுள்ளது அந்தக் கும்பல்.

நபர் ஒருவர் கடத்தி வரப்பட்டு சித்திரவதை இடம்பெறுவதாக யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

அந்நிலையில் ,  சம்பவம் இடம்பெற்ற வீட்டிருந்து அந்தக் கும்பல் தப்பித்து,  வானில் மன்னார் செல்ல முற்பட்டுள்ளது. அதனை அறிந்த புலனாய்வு பிரிவினர், கும்பல் பயணித்த வானை யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடியில் கடமையில் நின்ற போக்குவரத்து பொலிஸின் உதவியுடன் வழிமறிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது.

அதன் போது வானில் இருந்தவர்கள், தாங்கள் உறவினர் வீட்டுக்கு வந்ததாககவும் எவரையும் கடத்தி வரவில்லை என்றும் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.

இருந்த போதிலும் சந்தேகம் கொண்ட புலனாய்வு பிரிவினர் குறித்த வாகனத்தையும் அதில் இருந்தவர்களையும், சம்பவம் இடம்பெற்றதாக கூறப்பட்ட,  கொக்குவில் தாவடி பகுதியில் உள்ள வீட்டிற்கு அழைத்து வந்தனர். 

அதேவேளை குறித்த வீட்டினை பொலிஸ் அதிரடி படையினரின் சுற்றி வளைத்தனர்.

வானில் அழைத்து வரப்பட்டவர்களை வீட்டினுள் அழைத்து சென்று விசாரணைகளை முன்னெடுக்க முற்பட்ட வேளை வீட்டினுள், கடத்தப்பட்டவர் அடிகாயங்களுடன் காணப்பட்டுள்ளார். உடனடியாக அவரை மீட்டு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்த்தனர்.

அதனை தொடர்ந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வானில் இருந்த, 20, 29 மற்றும் 40 வயதுடைய பெண்கள் உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் பயணித்த ஹயஸ் வான் மற்றும் அந்த கடத்தல்காரர்களுடையது என சந்தேகிக்கப்படும் வீட்டில் நின்ற  3 மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டன.

கைது செய்யப்பட்ட நபர்களை யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

No comments