யாழில் சொந்தமாக காணி வாங்கிய பிக்கு அக்காணிக்குள் விகாரை அமைக்க விண்ணப்பம்


யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் தனியார் காணி ஒன்றினை கொள்வனவு செய்துள்ள பௌத்த பிக்கு ஒருவர் , அக்காணியினுள் விகாரை ஒன்றினை அமைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

சுன்னாகம் கந்தரோடை பகுதியில் தமிழ் - பௌத்தர்கள் வாழ்ந்தமைக்கான அடையாளங்களும் ,அதன் எச்சங்களும் காணப்படுகின்றன. 

அவை தொல்லியல் திணைக்களத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளன. 

தமிழ் - பௌத்த எச்சங்கள் காணப்படும் இடத்திற்கு அருகில் உள்ள தனியார் ஒருவருக்கு சொந்தமான சுமார் 06 பரப்பு காணியினை தென்னிலங்கையை சேர்ந்த பௌத்த பிக்கு ஒருவர் கடந்த ஒரு வருடங்களுக்கு முன்னர் பணம் கொடுத்து வாங்கியுள்ளார். 

இந்நிலையில் குறித்த காணிக்குள் புதிய விகாரை ஒன்றினை அமைக்கவுள்ளதாகவும் , விகாரை அமைக்கவுள்ள காணிக்கு அருகில் தொல்லியல் எச்சங்கள் காணபப்டுவதனால் , விகாரை அமைப்பதால் அதற்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா ? அக்காணியில் விகாரை அமைக்கலாமா ? என தொல்லியல் திணைக்களத்திடம் அனுமதி கோரி கடிதம் அனுப்பியுள்ளார். 

தொல்லியல் திணைக்களம் விகாரை அமைக்க அனுமதி வழங்கியவுடன் , ஏனைய அனுமதிகளை விரைந்து எடுத்து, விகாரை கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க பிக்கு தயாராக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

No comments