வவுனியா:மரணத்தில் சந்தேகம்!



வவுனியாவில் வீடொன்றில் இருந்து மீட்கப்பட்ட தம்பதிகள் மற்றும் அவர்களது இரண்டு பிள்ளைகளின் சடலங்கள் தொடர்பான பிரேதப் பரிசோதனைகள் நடந்து முடிந்துள்ள போதும் மரணத்திற்கான காரணம் வெளியாகவில்லை.

உயிரிழந்தவர்கள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. உயிரிழந்த சம்பவ தினத்தன்று வீட்டிற்கு வந்து திரும்பிய வாகனம் ஒன்று தொடர்பில் காவல்துறை விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளது.

சிவபாலசுந்தரம் கௌசிகன் என்ற 41 வயதுடைய நபர்அவரது மனைவி 36 வயதுடைய கௌசிகன் வரதராஜினி மற்றும் மகள்களான 09 வயதுடைய கௌசிகன் மைதிரா மற்றும் 03 வயதான கௌசிகன் கேசரா ஆகியோரின் சடலங்களுக்கே பிரேத பரிசோதனைகள் நேற்று நடத்தப்பட்டன.

இந்நிலையில் நாடளாவிய வiகையிலான வைத்தியசாலை; ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தினால் சடலங்களின் பிரேதப் பரிசோதனை அறிக்கைககள் தாமதமாகியுள்ள கூறப்படுகின்றது.

உயிரிழந்தமைக்கான சரியான காரணத்தை கண்டறிய உடல் உறுப்புகள் மற்றும் இரத்த மாதிரிகள் அரசாங்க மரண விசாரணை திணைக்களம் மற்றும் மருத்துவ ஆய்வு கூடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

வீட்டுத்தலைவர் கடனை செலுத்த முடியாத காரணத்தினால் இந்த மரணங்கள் ஏற்பட்டுள்ளதாக அயலவர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் அதுதான் சரியான காரணம் என்று கூற முடியாது என உயிரிழந்தவரின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்தவர் வெளிநாட்டு முகவர் நிறுவனத்தை நடத்தி வந்த நிலையில், மனைவி வவுனியா பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியையாக பணிபுரிந்துள்ளார்.



No comments