" என்னை வாளால் வெட்டினவர்களையே வாகனத்தால் மோதி கொன்றேன்"


தன்னை வாளால் வெட்டியவர்களை வாகனத்தால் மோதி கொலை செய்த குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவரை பளை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

குறித்த விபத்து சம்பவம் இடம்பெறுவதற்கு முன்னர் , தனது வீட்டுக்கு  வந்த மூவர் தன்னுடன் முரண்பட்டு , தன்னை வாளினால் வெட்டி காயங்களை ஏற்படுத்தி விட்டு சென்றனர். 

காயமடைந்த தான் சிகிச்சைக்காக வாகனத்தில் வைத்தியசாலைக்கு சென்று கொண்டிருந்த வேளை, என்னை தாக்கியவர்கள் இந்திராபுரம் பகுதியில் வீதியில் நின்று வாகனத்தை மறிக்க முற்பட்டனர். நான் அவர்களிடம் இருந்து தப்பிக்க வாகனத்தினை நிறுத்தாது , மறித்தவர்களை வாகனத்தால் மோதி விட்டு தப்பி வந்தேன் என பொலிஸ் நிலையத்தில் வாக்கு மூலம் அளித்துள்ளார். 

பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இந்திராபுரம் பகுதியில் யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலையில் வீதியில் நின்றவர்கள் மீது வாகனம் மோதியதில் முகமாலை பகுதியை சேர்ந்த நிருபராஜ் (வயது 26) எனும் இளைஞன் உயிரிழந்தார். மற்றுமொரு இளைஞன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். 

குறித்த நபர்கள் மீது வாகனத்தால் மோதிய நபர் வெட்டு காயங்களுடன் பளை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த நிலையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு , காயங்களுக்கு சிகிச்சை அளிக்க கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். 

No comments