சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வடக்கு, கிழக்கில் தனித்து போட்டியிடும் - ரவூப் ஹக்கீம்


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அம்பாறை மாவட்ட செயற்குழு கூட்டம் நேற்று முன்தினம் மாலை (ஜன. 10) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் மருதமுனை பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

அம்பாறை மாவட்டத்தில் கட்சியின் தற்போதைய நடவடிக்கைகள் சம்பந்தமாகவும், எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி போட்டியிடுவது பற்றியும் எதிர்கால கட்சியின் செயற்றிட்டங்கள் பற்றியும் கலந்துரையாடும் நோக்கில் இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் உரையாற்றுகையில், 

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி வடக்கு, கிழக்கில் தனித்து தனது மரச் சின்னத்தில் போட்டியிடும். 

வேட்பாளர் தெரிவை பொறுப்பெடுத்து, அதை செய்கிறவர்கள், எனக்கு ஆதரவாக செயற்பட்டவர்கள், என்னோடு நல்லுறவு பேணியவர்களைத்தான் நான் தெரிவுசெய்வேன். 

குறிப்பிட்ட நபருக்கு உண்மையிலேயே அவரது ஊரில் செல்வாக்கு இருக்கிறதா, அவருடைய வட்டாரத்தில் அவருக்கு மக்களின் ஆதரவு இருக்கிறதா, அவர் கட்சியின் நன்மதிப்பை பாதுகாக்கக்கூடியவரா என பார்த்து, அவருக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். 

வேட்பாளர் பத்திரத்துக்கான கடைசி சம்மதத்தை நான் தராமல் யாரும் போட முடியாது. தெரிவு சரியாக நடந்திருக்கிறதா என்பதை தீர்மானித்துவிட்டுத்தான் தலைவர் அதனை வழங்குவார். 

அலிஸாகிர் மௌலானாவுக்குரிய அந்தஸ்து இந்த கட்சியில் எப்பொழுதும் இருக்கும். கட்சியின் வாக்கு பலத்தோடு பலர் கட்சிக்குள்ளே வந்திருக்கிறார்கள். ஆனால், அலிஸாகிர் மௌலானா தனக்கிருந்த வாக்கு பலத்தோடு கட்சிக்குள் வந்தவர். 

இவர் பாராளுமன்றம் செல்வதை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் பொறுப்பெடுக்கிறார். அவருடைய பெருந்தன்மையை நான் பகிரங்கமாக அறிவிக்க விரும்புகின்றேன்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தனித்து, அதன் மரச் சின்னத்தில் போட்டியிடும். 

ஐக்கிய மக்கள் சக்தியும் இந்த தேர்தலில் தனித்தே போட்டியிடும். இதன் மூலம்  பலத்தையும் கண்டுகொள்ள முடியும். 

தேர்தல் முடிந்த பிறகு கூட்டமைப்பு அமைப்பது தொடர்பில் யோசிப்போம். இதற்கு சஜித் பிரேமதாஸவும் உடன்பாட்டை தெரிவித்திருக்கிறார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பலத்தை வெளிக்காட்டுவதற்கு இது ஒரு நல்ல சந்தர்ப்பம் என்று தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம்.ஹரீஸ், பைசால் காசிம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஐ.எம். மன்சூர், அலி சாஹீர் மெளலானா, கட்சியின் தவிசாளர் ஏ.எல்.அப்துல் மஜீட், செயலாளர் நாயகம் /ஜனாதிபதி சட்டத்தரணி எம்.நிசாம் காரியப்பர், கட்சியின் உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், உறுப்பினர்கள், அம்பாறை மாவட்ட கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

கூட்டத்தின் இறுதியில் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை தயாரிப்பதற்கான குழுவொன்று பிரதேச ரீதியாக அமைக்கப்பட்டது. 

இதன்போது சம்மாந்துறை பிரதேசத்தை சேர்ந்த இரு குழுக்களுக்கு இடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து கட்சி ஆதரவாளர்களுக்கு மத்தியில் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் வாக்குவாதம் கைகலப்பாக மாறியதையும் காணக்கூடியதாக இருந்தது.

No comments