யாழில் அகப்பட்டது மீட்டர் வட்டி கோஸ்டி!



 யாழ்ப்பாணத்தில் மீற்றர் வட்டிக்கு பணம் கொடுத்தவர்களிடம் பணத்தை மீள வசூலிப்பதற்காக அடித்து துன்புறுத்தும் மற்றொருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். சுன்னாகத்தைச் சேர்ந்த அவரை சுன்னாகம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மீற்றர் வட்டிக்கு பணம் பெற்றவர்களை தோட்டக் காணி ஒன்றுக்கு அழைத்து வந்து கொடூரமாகத் தாக்கி துன்புறுத்தும் காணொளி காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. 

மீற்றர் வட்டிக்கு வழங்கிவிட்டு பணத்தை மீள வசூலிப்பதற்காக வர்த்தகர்களை அடித்துத் துன்புறுத்தும் இருபதற்கும் மேற்பட்ட காணொளிகள்  உயர்மட்டத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன.

அவற்றின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் சுன்னாகத்தில் நேற்றுமுன்தினம் காரில் பயணித்தவரை வாகனத்தினால் மோதி கொலை செய்ய முயற்சித்த சம்பவத்துடன் தொடர்புடையதாக பொலிஸில் சரணடைந்த ஜெகன் உள்ளிட்ட மூவருக்கும் மீற்றர் வட்டிக்கு பெற்றவர்களை அடித்துத் துன்புறுத்தும் சம்பவத்துடன் தொடர்புள்ளமை தெரியவந்தது.

மருதனார்மடம் சந்தைக்கு அண்மையாக உள்ள தோட்டக்காணிக்கு அழைத்தே பலரை அடித்துத் துன்புறுத்தியும் அச்சுறுத்தியும் உள்ளனர் என்பதும் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

காணொளியில் முகக்கவசம் அணிந்து அடித்து துன்புறத்தும் நபர் நேற்று யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இன்று முற்படுத்தப்பட்டார். அவரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா உத்தரவிட்டார்.

இந்த நிலையில் காணொளியில் தலைக்கவசம் அணிந்தவாறு தாக்குதல் நடத்துபவர் என அடையாளம் காணப்பட்டவர் சுன்னாகம் பொலிஸாரினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.


No comments