கடலட்டை பண்ணைகள் நல்லது;உருட்டு



சட்டவிரோத கடலட்டை பண்ணை விவகாரம் நீதிமன்ற படியேறியுள்ள நிலையில் கடலட்டை பண்ணைகளை நியாயப்படுத்த கடற்றொழில் அமைச்சரது ஆதரவு தரப்புக்கள் முனைப்பு காண்பித்துவருகின்றன.

ஆழங்குறைந்த சூடான நீர்ப்பரப்பில் அமைக்கப்படும் கடலட்டைப் பண்ணைகளினால் மீன்களின் இனப் பெருக்கம் பாதிக்கப்படும் என்பது தீய நோக்கோடு மக்களை தவறாக வழிநடத்தும் முயற்சியென பிரச்சாரங்கள் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

யாழில் கடலட்டைப் பண்ணைகளை அமைத்துள்ள கடற்றொழிலாளர்கள், கடலட்டைப் பண்ணைகள் சரியான முறையில் உரிய நியதிகளுக்கு அமைய முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் சட்டவிரோத அட்டைப் பண்ணைகள் இல்லையெனவும் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இன்று செவ்வாய்க்கிழமை கடலட்டைப் பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ள யாழ் கடற் பிரதேசங்களுக்கு ஊடகவியலாளர்களை நேரடியாக அழைத்து செல்லப்பட்டு, கடலட்டைப் பண்ணைகளின் அமைப்பு தொடர்பாகவும் அவை பாரம்பரிய கடற்றொழிலாளர்களுக்கு இடையூறு இன்றி அமைக்கப்பட்டுள்ளதாகவும் பிரச்சாரப்படுத்தப்பட்டுள்ளது.

சில கடலட்டைப் பண்ணைகளுக்கான அனுமதிப் பத்திர ஆவணங்கள் இதுவரை கிடைக்கவில்லை. அதற்காக அவற்றை சட்ட விரோத பண்ணைகளாக கருத முடியாது. 

நீர் வாழ் உயிரினங்களுக்கோ அல்லது சூழலுக்கோ எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது என்பதை உறுதிப்படுத்திய பின்னர், சம்மந்தப்பட்ட பிரதேசத்தினை சேர்ந்த கடற்றொழில் சங்கங்களுடன் புரிந்துணர்வை ஏற்படுத்திய பின்னரே, பண்ணைகள் அமைப்பதற்கு அனுமதிகள் அளிக்கப்படுகின்றதெனவும் பிரச்சாரங்கள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.


No comments