யாழில் பெப்ரவரி 17ஆம் திகதி சுதந்திர தினம்


ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பங்குபற்றுதலோடு தேசிய ரீதியிலான 75 வது சுதந்திரதின  கொண்டாட்டம் யாழ்ப்பாண கலாச்சார மத்திய நிலையத்தில் இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் இளங்கோவன் தெரிவித்தார்.

யாழ். மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் புதன் கிழமை இடம்பெற்ற ஆரம்ப கட்ட கலந்துரையாடலின் பின்பு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் மூன்று முக்கியமான நிகழ்வுகள் இடம் பெறுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

குறிப்பாக பெப்ரவரி நான்காம்  திகதி கொழும்பில் இடம்பெறவுள்ளது. 

அதற்கு பின்னராக பெப்ரவரி 17ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டு இருக்கின்ற கலாச்சார மத்திய நிலையத்தில்  அதனுடைய ஒரு முழுமையான செயல்பாட்டு  நிகழ்வோடு சுதந்திர விழா ஏற்பாடுகளும்  முன்னெடுக்கப்படுகின்றன

 குறிப்பாக கலாச்சார மத்திய நிலையத்தின் ஒரு இணைப்பு முகாமைத்துவ குழுவில்  இருக்கிற ஆளுநர் மற்றும் இந்திய துணை தூதுவரத்தின் அதிகாரிகள் மற்றும் யாழ் மாநகர சபையின் அதிகாரிகள்  மத்திய கலாச்சார அமைச்சுடன்   இணைந்ததாக  கலாச்சார மத்திய நிலையத்தில் கலாச்சார நிகழ்வுகளை நடத்துவற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அத்தோடு  சுதந்திரதின நிகழ்வினை  முக்கியமாக மாகாண மட்டத்திலே  இணைப்பான ஒரு விழாவாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வில் ஜனாதிபதி கலந்து கொள்வதற்கு ஏற்ற வாறாக  நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவே ஜனாதிபதி கலந்து கொள்ள உள்ளதால் பெரியளவில் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவித்தார்.

No comments