வல்லையில் பொருத்தப்பட்டிருந்த மின் குமிழ்கள் கம்பத்துடன் திருட்டு!


யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லை பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த வீதி மின் விளக்குகள் , இனம் தெரியாத கும்பலினால் அவற்றின் கம்பங்களுடன் அறுத்து எடுத்து செல்லப்பட்டுள்ளது. 

வல்லை பகுதிகளில் இரவு நேரங்களில் வழிப்பறி கொள்ளைகள் அதிகரித்து , காணப்பட்டு வந்ததுடன் , அப்பகுதி இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுவதனால் விபத்துக்களும் இடம்பெற்று வந்தன. அதனால் அந்த வீதியை இரவு வேளைகளில் பயன்படுத்துவோர் அச்சத்துடனையே பயணித்தனர். 

அந்நிலையில் கரவெட்டி பிரதேச சபையினால் தலா ஒரு இலட்ச ரூபாய் பெறுதியான சூரிய சக்தியில் இயங்க கூடிய (சோலர் லைட்) மின்குமிழ்கள் பொருத்தப்பட்டன. 

மின் விளக்குகள் பொருத்தப்பட்ட மையினால் , அப்பகுதியில் இரவு வேளைகளில் மின் குமிழ்கள் ஒளிர்ந்தமையால் , விபத்துக்கள் , வழிப்பறி கொள்ளைகள் குறைவடைந்து நிலையில் அந்த வீதி ஊடாக பயணிப்போர் அச்சமின்றி பயணித்தனர். 

தற்போது அப்பகுதியில் இருந்த மூன்று மின் விளக்குகளை , இனம் தெரியாத கும்பல், அதன் கம்பங்களுடன் அடியோடு வெட்டி களவாடி சென்றுள்ளனர். 

மின் கம்பங்கள் களவாடப்பட்டமை தொடர்பில் கரவெட்டி பிரதேச சபையினால் , வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. 




No comments