திருவெம்பாவை உற்சவத்தை நடாத்த கோரி காரைநகரில் போராட்டம்!


காரைநகர் ஈழத்துச் சிதம்பர திருவம்பாவை உற்சவத்தினை வழமைபோல் சிறப்பாக நடாத்தக் கோரி காரைநகரில் இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தின் நிறைவில் ஆலய ஆதீன கர்த்தாவிடம் மகஜரை கையளிப்பதற்கு அவரை அழைத்தவேளை அவர் அங்கு இல்லை என அவரது உறவினர்கள் தெரிவித்தனர். 

அதன் பின்னர் அங்கு முரண்பாடு தோன்றியது. பின்னர் மகஜர் ஆலய வாயிலில் வைக்கப்பட்டது.

இது தொடர்பில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவிக்கையில்,

 ஈழத்து சிதம்பரம் என வர்ணிக்கப்படும் காரைநகர் சிவன் கோவில் திருவெம்பாவை உற்சவத்தினை நடத்தாமல் இருப்பதற்கு ஆலயத்தினை பாலஸ்தாபனம் செய்வதற்கு நிர்வாகத்தினரால் பலதரப்பட்ட முயற்சி எடுக்கப்பட்டது.

அதனையடுத்து திருவிழா உபயகாரர்களினால் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டதன் அடிப்படையில் பாலஸ்தாபனம் செய்ய இடைக்கால தடை உத்தரவினை ஊர்காவற்துறை நீதிமன்றம் வழங்கி இருந்தது. 

நீதிமன்ற தீர்ப்பை அடுத்து திருவெம்பாவை உற்சவம் நடைபெறும் என்ற அடிப்படையில் ஏற்பாடுகள் இடம் பெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் திருவெம்பாவை உற்சவத்தினை கொரோனா காலத்தில் நடத்தியது போல காலை 5 தொடக்கம் 7 மணிக்குள் திருவிழாவை நடத்துவதற்கு ஆலய நிர்வாகத்தினர் முயற்சி எடுத்து வந்துள்ளனர்.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் திருவெம்பாவை உற்சவத்தினை வழமை போல் சிறப்பாக முன்னெடுப்பதற்கு ஆலய நிர்வாகம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனக் கோரி காரைநகர் மக்களால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

புதிய வீதி காரைநகரில் இருந்து ஆரம்பமான குறித்த போராட்டமானது பேரணியாக சென்று ஈழத்துச் சிதம்பரத்திற்கு முன்னால் நிறைவுற்றது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நந்திக் கொடிகளையும் பதாதைகளையும் ஏந்திய வண்ணம்  போராட்டத்தில் ஈடுபட்டனர்.








No comments