மறுக்கிறார் ரணில்!


 

மாகாண சபைகளுக்கு பதிலாக மாவட்ட அபிவிருத்திக் குழுக்களை ஸ்தாபிக்க ஜனாதிபதி தயாராகி வருவதாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானது என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்த பதில், அர்த்தத்தை சிதைக்கும் விதத்தில் பல ஊடகங்களில் செய்திகளாக வெளியாகியுள்ளன என அந்தப் பிரிவு தெரிவித்துள்ளது.

எனினும் 2023 ஆம் நிதி ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மீதான குழு நிலை விவாதத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் மைத்திரிபால சிறிசேனவின் கருத்துக்கு பதிலளித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மாகாண சபைகளில் மாவட்ட அபிவிருத்திக் குழுக்களை ஸ்தாபிக்க தயார் எனத் தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுதவிர மாகாண சபைகள் கலைப்பு தொடர்பாக ஜனாதிபதி எந்த கருத்தையும் வெளியிடவில்லை என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நிறைவேற்றுத் தீர்மானங்களை அமுல்படுத்துவதில் அரசாங்கம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு இடையில் சரியான ஒருங்கிணைப்பைப் பேணுவதற்கான களமாக மாவட்ட அபிவிருத்திக் குழுக் கள் செயல்படும் என்பதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நிலைப்பாடாகும் என்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் மூலம், வளர்ச்சிப் பணிகள் முறையாக நடைபெறுவதுடன், நிதி வீண் விரயம் மற்றும் தாமதங்கள் தவிர்க்கப்படும் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

No comments