பிரான்சில் நினைவேந்தப்பட்ட மாவீரர் நாள்

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2022 பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் 27.11.2022 ஞாயிற்றுக்கிழமை 91 மாவட்டத்தின் Villebon-sur-Yvette

பகுதியில் உள்ள பிரமாண்டமான மண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்றது.

பகல் 12.30 மணிக்கு பொதுச்சுடரினை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் திரு.ஜோசேப் அவர்கள் ஏற்றிவைக்க, தமிழீழத் தேசியக் கொடியினை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு மாவீரர் பணிமனைப் பொறுப்பாளர் திரு.நிதர்சன் அவர்கள் ஏற்றிவைத்தார்.

தொடர்ந்து தமிழீழத் தேசியத் தலைவரின் கடந்தகால மாவீரர்நாள் உரைகளின் முக்கியதொகுப்பு இடம்பெற்றது. தொடர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலகத் தொடர்பகத்தினரின் கொள்கை வகுப்பு அறிக்கை ஒலிபரப்பப்பட்டது. 13.35 மணிக்கு அகவணக்கம் இடம்பெற்றது.

துயிலும் இல்ல மணியோசை ஒலித்ததைத் தொடர்ந்து மாவீரர் லெப்.சங்கர் அவர்களின் திருவுருவப்படத்தின் முன்பாக ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு,மலர் மாலை அணிவிக்கப்பட்டது.

ஈகைச்சுடரினை கடற்புலிகளின் தாக்குதல் தளபதியான 16/07/1995 காங்கேசன்துறை முகத்தினுள் ஊடுருவி சிறீலங்காக் கடற்படையின் எடித்தாரா கட்டளைக்கப்பலை மூழ்கடித்த லெப்டினன்ட் கேணல் சந்திரன் (நரேஸ்) அவர்களின் பெற்றோர்கள் ஏற்றிவைக்க இரண்டு மாவீரர்களின் தாயார் மலர்மாலை அணிவித்தார்.

சமநேரத்தில் பாரிசு துயிலும் இல்லத்தில் லெப்.கேணல் நாதன், கப்டன் கஜன், கேணல் பரிதி ஆகியோரின் கல்லறைகளில் வணக்க நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், சார்சல் பகுதியில் அமைந்துள்ள லெப்.சங்கர் அவர்களின் நினைவுத்தூபியின் அருகில் மாவீரர் வணக்க நிகழ்வு இடம்பெற்றது. துயிலும் இல்லப்பாடல் ஒலிக்க ஆரம்பித்ததும், கண்ணீர் காணிக்கையோடு மாவீரர் பெற்றோர், உரித்துடையோர் சுடர் ஏற்றி மலர்வணக்கம் செய்தனர். தொடர்ந்து இரவு வரை மாவீரர் துயிலும் இல்லத்தில் பொதுமக்கள் தமது மலர்வணக்கத்தை மேற்கொண்டவண்ணமிருந்தனர்.

தாயகத்தில் மாவீரர் துயிலும் இல்லத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட மாவீரர் நினைவுக்கல்லும் மண்டபத்தில் வணக்கத்திற்கு வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து அரங்க நிகழ்வுகள் ஆரம்பமாகி இடம்பெற்றன. தமிழர் கலைபண்பாட்டுக் கழக கலைஞர்களின் மாவீரர் நினைவு சுமந்த பாடல்களும், தமிழ்ச்சோலைப் பள்ளி மற்றும் நடனப்பள்ளி மாணவர்களின் மாவீரர் நினைவுசுமந்த பாடல்களுக்கான நடன நிகழ்வுகளும், மாவீரர் நினைவு சுமந்த பேச்சுப் போட்டியில் முதல் இடங்களைப் பெற்றவர்களின் பேச்சுக்களும், பிரான்சு தமிழ் இளையோர் அமைப்பு உறுப்பினர்களின் பிரெஞ்சு மொழி உரை மற்றும் சிறப்பு விருந்தினர்களாக வருகைதந்திருந்த வெளிநாட்டவர்களின் பிரெஞ்சுமொழி உரை என்பனவும் இடம்பெற்றிருந்தன.

Mme Marie George Buffet, 2006யில் இருந்து பாராளுமன்றத்தில் தமிழருக்கான ஆதரவுத் தளத்தை உருவாக்கி தொடர்ந்து எங்களுக்கு துணையாக இருப்பவர்.

M. Stephen Blanchet Sevran மாநகர சபை முதல்வர், கடல் புலிகளுக்கான நினைவேந்தலை நாடாத்துவதற்கு தளம் அமைத்து 2009, தமிழர் இனப்படுகொலை யை வலியுறுத்தி முதல் நினைவுக் கல்லை நாட்டித் தமிழருக்காகக் குரல் கொடுப்பவர், இதற்கும் மேலாக பசுமைக் கட்சி தலைவர்கள், மற்றும் பல கட்சி பிரமுகர்கள் பங்குபற்ற முடியாத சூழலில் தமது ஆதரவைத் தெரிவித்துச் செய்திகள் அனுப்பி இருந்தமை இங்கு குறிப்பிடத் தக்கது.

டென்மார்க் நாட்டிலிருந்து வருகைதந்த டென்மார்க் அரசியல்துறை ஒருங்கிணைப்பாளர் திரு. சுகுனேந்திரன் மார்க்கண்டு அவர்களின் சிறப்பு உரை, பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப் பொறுப்பாளர் திரு.மேத்தா அவர்களின் உரை என்பனவும் இடம்பெற்றிருந்தன.

மாவீரர்களின் வரலாற்று நூல் வெளியீடும் இடம்பெற்றது.

சூரியப்புதல்வர்கள் நூலை அரங்கில் மாவீரர் பணிமனைப் பொறுப்பாளர் திரு.நிதர்சன் அவர்கள் . வெளியிட்டுவைக்க, பிரான்சு தமிழ் இளையோர் அமைப்பு பொறுப்பாளர் செல்வன் ஆறொன் பெற்றுக்கொண்டார்

பிரான்சின் ஏனைய பகுதிகள் மற்றும் தாயகத்தில் இடம்பெற்ற மாவீரர் நினைவேந்தல்கள் திரையில் காண்பிக்கப்பட்டிருந்ததுடன் அனைத்தும் நேரலையாக இணைய வழியில் சென்றமை குறிப்பிடத்தக்கது. அத்தோடு பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் நாம் சஞ்சிகையும் சிறப்புவெளியீடாக மண்டபத்தில் வழங்கப்பட்டது.

தொடர்ந்து மாவீரர் நினைவுசுமந்த கலைத்திறன் போட்டியில் (கவிதை கட்டுரை, பேச்சு, தனிநடிப்பு, பாட்டு, ஓவியம்) வெற்றியீட்டியவர்களுக்கான பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டது. பரிசில்களை மாவீரர் பெற்றோர் மற்றும் செயற்பாட்டாளர்கள் வழங்கி மதிப்பளிப்புச் செய்திருந்தனர். இம்முறை தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தினால் நடாத்தப்பட்ட மாவீரர் நினைவு சுமந்த தாயக வரலாற்றுத் திறனறிதல் 2022 இல் பங்குகொண்ட மாணவர்கள் மாவீரர் நாள் அரங்கில் மதிப்பளிப்புச் செய்துவைக்கப்பட்டிருந்தனர்.

தமிழர் கலை பண்பாட்டுக்கழக கலைஞர்களின் ” நம்பிக்கை” என்ற சிறப்பு நாடகம் அனைவரையும் சிந்திக்க வைத்தது. வழமைபோன்று வெளியீட்டுப்பிரிவினரும் தமது வெளியீடுகளை பிரமாண்டமாகக் காட்சிப்படுத்தியிருந்தனர். அவற்றை மக்கள் முண்டியடித்துக்கொண்டு வாங்கியதையும் காணமுடிந்தது.

தமிழீழ உணவகத்தினரும் கலந்துகொண்ட மக்களுக்கான உணவுத்தேவையை பூர்த்திசெய்திருந்தனர. ஊடகங்கள் குறித்த நிகழ்வுகளை காட்சிப்படுத்துவதில் முனைப்புக்காட்டியிருந்தன. தமிழீழ மக்கள் பேரவை, தமிழ் இளையோர் அமைப்பினர், போன்ற அமைப்புக்கள் தமது காட்சிப்படுத்தலை மேற்கொண்டிருந்தன. 21.00 மணியளவில் நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடல் ஒலித்து நிறைவடைந்ததும் தமிழீழத் தேசியக்கொடி இறக்கிவைக்கப்பட்டது. தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் அனைத்து நிகழ்வுகளும் உணர்வோடு நிறைவடைந்தன

அனுபவம்வாய்ந்த அறிவிப்பாளர்கள் மாவீரர் நினைவுசுமந்து சிறப்பாக நிகழ்வினைத் தொகுத்து வழங்கியிருந்தனர்.

பல்லாயிரக்கணக்கான மக்கள் அணிதிரண்டுவந்து மாவீரர்களை நினைவேந்திச் சென்றமை மெய்சிலிர்க்க வைத்தது.

No comments