அரச ஊழியர்களிற்கு சம்பளத்திற்கு சிங்கி!


இலங்கையில்  அரசு ஊழியர்களுக்கான சம்பளம், மானியம் போன்றவற்றை வழங்க அரசுக்கு தற்போது கிடைக்கும் வருமானம் போதாது என்று நிதி அமைச்சின் செயலாளர் கே.எம். மஹிந்த சிறிவர்தன தெரிவித்தார்.

அரசாங்கத்தினால் செலுத்தப்படாத உண்டியல்களின் பெறுமதி சுமார் 200 பில்லியன் ரூபா எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

"திறைசேரியில் இருந்து, தினசரி பணப்புழக்கத்தை கையாள்வது எவ்வளவு கடினம் என்பதை என்னால் பார்க்க முடிகிறது. ஏனெனில் சம்பளம், மானியம் போன்ற அத்தியாவசிய விஷயங்களுக்கு கூட இந்த வருமானம் போதாது.

இதன் மூலம் அரசாங்கத்தின் செலுத்தப்படாத உண்டியல்களின் பெறுமதி சுமார் 200 பில்லியன் ரூபாவாகும். குறிப்பாக கட்டுமானம் மற்றும் பிற நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகைகள் அவற்றில் அடங்கும். அரசாங்கத்தால் அவற்றை கூட செலுத்த முடியவில்லை” என்றார்.

 எனவே இந்தப் பின்னணியைக் கருத்திற்கொண்டு அரசாங்க வருமானத்தை ஈட்டுவதற்காகவே புதிய நிதி மற்றும் வரிக் கொள்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்த செயலாளர், தியாகங்களைச் செய்யாமல் அரசாங்க வருவாயை அதிகரிப்பது கடினம் எனவும் தெரிவித்தார். வரவு செலவுத் திட்டத்தில் வரி நிர்வாகத்தை வலுப்படுத்த பல நடவடிக்கைகள் முன்மொழியப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

No comments