இலங்கையில் பாய்கிறது தகவலறியும் சட்டம்!



இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட தகவல்களை வெளியிடுமாறு பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த தகவல்களை எதிர்வரும் 28ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடுமாறு பொலிஸாருக்கு தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது. 

குறிப்பிட்ட காலத்துக்குள் இந்த தகவல்கள் வழங்கப்படாவிட்டால், இலங்கை பொலிஸார் மற்றும் தகவல் அதிகாரிக்கு எதிராக நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய தீர்மானித்துள்ளதாகவும் தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. 

2019 முதல் நவம்பர் 2021 வரை பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை, அவர்களின் வயது, ஆண் மற்றும் பெண்களின் எண்ணிக்கை உள்ளிட்ட தகவல்களை கோரி, பொலிஸ் தலைமையகத்துக்கு தகவல் அறியும் கோரிக்கை அனுப்பப்பட்டது. அப்போது பொலிஸ் சட்டப் பிரிவின் பணிப்பாளராகக் கடமையாற்றிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தர்ஷன் கல்லகே, சட்டத்தரணி கோரியுள்ள தகவல், சம்பந்தப்பட்ட சட்டத்தின் கீழ் உள்ள தகவல் வகையுடன் தொடர்புடையது அல்ல என பதில் கடிதத்தில் தெரிவித்துள்ளார். 

இதனைத் தொடர்ந்து சட்டத்தரணி சுரேன் டி.பெரேரா தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்திருந்தார். இந்த நிலையிலேயே பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட தகவல்களை வெளியிடுமாறு பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments