கோத்தாவிற்கு விமானக்கட்டணமா?இல்லவே இல்லை!



முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சிங்கப்பூரிலிருந்து வாடகை விமானத்தில் தாய்லாந்து செல்வதற்கான கட்டணத்தை இலங்கை அரசாங்கம் செலுத்தியதாக அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்திருந்த நிலையில் கோட்டாவின் பயணங்களுக்கு அரசாங்கம் அதற்கு எவ்வித பங்களிப்பும் செய்யவில்லை என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி தனது வெளிநாட்டு விஜயங்களுக்காக தனது சொந்த நிதியை செலவிட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

அமைச்சரவை செய்திகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவருக்குப் பதிலளித்த அமைச்சர் குணவர்தன, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தாய்லாந்து செய்வதற்கான கட்டணத்தை இலங்கை அரசாங்கம் செலுத்தியதாகவும் அது அரசாங்கத்தின் பொறுப்பு என்றும் தெரிவித்திருந்தார்.

ஒவ்வொரு நிறைவேற்று ஜனாதிபதியும் ஓய்வு பெற்ற பின் சலுகைகள் மற்றும் சிறப்பு வசதிகளை அனுபவிக்கிறார்கள், மேலும் அவர்களுக்கு கொடுப்பனவும் வழங்கப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன, சந்திரிகா குமாரதுங்க மற்றும் திருமதி. ஹேமா பிரேமதாசவுக்கு குடியிருப்பு, கொடுப்பனவு மற்றும் ஏனைய வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர் குணவர்தன எதிர்காலத்தில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய நாடு திரும்பினால், ஓய்வுபெற்ற ஜனாதிபதிக்கு உரிய அனைத்து வசதிகளையும் சலுகைகளையும் அரசாங்கம் அவருக்கு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.


No comments