முல்லையில் ஆரம்பமானது போராட்டம்!

 


சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் சர்வதேச விசாரணை கோரி புதுக்குடியிருப்பு நகரில் மாபெரும் கவனயீர்ப்பு பேரணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.

2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தம்  நிறைவடைந்ததன் பின்னர் இராணுவத்திடம் கையளித்து காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் யுத்த காலப் பகுதிகளில் வெள்ளை வான்களில் கடத்தப்பட்டு மற்றும் பல்வேறு வகைகளிலும் காணாமல் ஆக்கப்பட்ட தங்களுடைய உறவுகளை தேடி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் 2009 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இவ்வாறு தங்களுடைய போராட்டங்களுக்கு எந்த தரப்புக்களும் உரிய தீர்வுகளை வழங்காத நிலைமையிலே கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் வடக்கு கிழக்கின் உடைய எட்டு  மாவட்டங்களிலும் தொடர்ச்சியான கவனயீர்ப்பு போராட்டங்களை ஆரம்பித்திருந்தனர் அவ்வாறு தொடர்ச்சியாக ஆரம்பிக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டமானது இன்று 2000 நாட்களைக் கடந்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

உறவுகளை தேடி அலைந்து இவ்வாறு தொடர் போராட்டங்களில் ஈடுபட்ட சுமார் 140 தாய் தந்தையர்கள்   உயிரிழந்துள்ள நிலையில் தங்களுக்கான நீதியை வலியுறுத்தி அவர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்

இவ்வாறான நிலைமையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் எட்டாம் திகதி ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டமானது இன்று 2000 நாட்களை கடக்கின்ற நிலையில்  சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமாகிய   30 8 2022 இன்று தங்களுடைய உறவுகளுக்கு என்ன நடந்தது என்ற நீதியான சர்வதேச விசாரணையை வலியுறுத்தி புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் பாரிய அளவிலான மக்கள் போராட்டம் ஒன்றினை ஆரம்பித்துள்ளனர்.

No comments