தீக்குளிக்க முயன்ற பேராசிரியரை காப்பாற்றிய யாழ்.பல்கலை துணைவேந்தர்!




தனக்கு துறைத்தலைவர் பதவி தரக் கோரி யாழ்ப்பாண பல்கலைக்கழக பேராசிரியர் விஜயகுமார் தற்கொலை செய்ய முயன்ற நிலையில் அவரை விரைந்து காப்பாற்றியுள்ளார் யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர்.துணைவேந்தரது சமயோசித நடவடிக்கை குறித்து பல்கலைக்கழக அனைத்து மட்டங்களிலும் பாராட்டுக்கள் குவிந்துவருகின்றன. 

யாழ் பல்கலைக்கழக துறையின் ஒன்றின் தலைவராக இருந்த பேராசியர் ஒருவர் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் மத்தியில் அமெரிக்கா செல்ல அனுமதி கோரி இருந்தார். அதற்கான அனுமதி அவருக்கு வழங்கப்பட்டது.ஆனால் குறித்த துறை தலைவர் பதவியை ராஜினாமா செய்து வெளியேற முற்பட்டதாக மற்றொரு தகவல் தெரிவிக்கின்றது.

இந்நிலையில் , அவரது துறைத்தலைவர் பதவி மற்றுமொரு பேராசிரியரான விஜயகுமாரிற்கு வழங்கப்பட இருந்தது.

இதற்கான உறுதி மொழியை துணைவேந்தர் பேராசிரியர் விஜயகுமாரிற்கு வழங்கியுள்ளார்.

அந்நிலையில் துறைத்தலைவராக இருந்த பேராசியர் தனது தனிப்பட்ட காரணத்தால் வெளிநாடு சென்று கற்கும் முடிவை இடை நிறுத்தி தனது துறைத்தலைவர் பதவியில் நீடிக்க இருந்ததாக தெரியவருகின்றது. 

அதனால் புதிதாக துறைத்தலைவராக நியமனம் பெறவிருந்த பேராசியர் ஏமாற்றத்திற்கு உள்ளானார். 

அதன் காரணமாக கடும் மனஉளைச்சலுக்கு உள்ளாகி இருந்த பேராசிரியர் விஜயகுமார், தனக்கு நெருக்கமானவர்களிடம் தனக்கு துறைத்தலைவர் பதவி கிடைக்காவிடின் பல்கலைக்கழகத்தினுள் அமைந்துள்ள பரமேஸ்வரன் ஆலய முன்றலில் தீக்குளித்து உயிரை மாய்ப்பேன் என கூறியுள்ளார். 

இந்நிலையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தினுள் நுழைந்த பேராசியர் விஜயகுமார் துணைவேந்தர் முன்னிலையில் தனது உடம்பில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளார். 

அதனை அவதானித்த துணைவேந்தர் விரைந்து செயற்பட்டு , அவரை தடுத்து நிறுத்தி , சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்துள்ளார். 

துணைவேந்தரது விரைந்த நடவடிக்கை பாராட்டை பெற்றுள்ளது.

இதனிடையே சம்பவம் தொடர்பில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில் துணைவேந்தரது ஊடகப்பேச்சாளர் ஊடகங்களிடையே உறுதிப்படுத்தியுள்ளார்.


No comments