இலங்கை தொடரும் எரிபொருள் வரிசை மரணங்கள்!

 


இலங்கை தொடரும் எரிபொருள் வரிசை மரணங்கள் மக்களிடையே அச்சத்தை தோற்றுவித்துவருகின்றது.

 காலி-மாகால்லவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.நேற்றிரவு இரு குழுக்களுக்கு இடையே மோதல்கள் இடம்பெற்றிருந்ததாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. சம்பவத்தின் போது மேலும் 3 பேர் காயமடைந்துள்ளனர்.

இதனிடையே முள்ளியவளை லங்கா ஐ.ஓ.சி எரிபொருள்  நிரப்பு நிலைய உரிமையாளர் மீது முச்சக்கர வண்டியில் வந்த மூவர் தாக்குதல்  நடத்தியுள்ளார்கள்.

முல்லைத்தீவு - முள்ளியவளை, தண்ணீரூற்று பகுதியில் அமைந்துள்ள லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் விமானப்படையினரின் பாதுகாப்புடன், பிரதேசசெயலக உத்தியோகத்தர்கள், கிராம அலுவலகர்களின் ஒழுங்கு படுத்தலில் டோக்கன் அடிப்படையில் கிராமங்கள் தோறும் மக்களுக்கு எரிபொருள் வழங்கப்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று மாலை முள்ளிவாய்க்கால் மேற்கு அம்பலவன் பொக்கணை, ஆகிய கிராம மக்களுக்கு பெற்றோல் வழங்கப்பட்டு வந்த நிலையில், வெளியில் இருந்து திடீரென எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குள் முச்சக்கரவண்டியில் பயணித்த மூவர் தமது முச்சக்கர வண்டிக்கு எரிபொருள் வழங்குமாறு வற்புறுத்தியுள்ளதை தொடர்ந்து அங்கு வாக்குவாதம் இடம்பெற்று கைகலப்பாக மாறி, எரிபொருள்  நிரப்பு நிலைய உரிமையாளர் மீது தாக்குதல்  நடத்தியுள்ளார்கள். 


எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பொலிஸார்,விமானப்படையினர் அங்கு கூடியவர்கள் தாக்குதல் நடத்தியவர்களை சாமாளிக்க முற்பட்ட போதும் முச்சக்கர வண்டியினை அங்கிருந்து எடுத்துசென்றுள்ளார்கள்.


சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், ஏனையவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளார்கள்.

No comments