முல்லைதீவில் டிப்பரில் கடத்தப்பட்ட 3 இளைஞர்கள்!


முல்லைத்தீவு  மாவட்டத்தின்  புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட கோம்பாவில் , வள்ளிபுனம், தேரவில் பகுதிகளை சேர்ந்த மூன்று இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தி,  அவர்களை  டிப்பரில் கடத்திச் சென்று கடுமையாக தாக்குதல் நடத்திய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. 

கடந்த வாரம் இளைஞர் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலின் போது கல்லாற்று பகுதியினை சேர்ந்த இளைஞன் ஒருவரை தாக்கியதாக தெரிவிக்கப்படும் மூன்று இளைஞர்களுக்கே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

நேற்று மாலை இளைஞர் குழு ஒன்று டிப்பரில் மூன்று இளைஞர்களையும் கடத்தி சென்ற வேளை விசுவமடு பகுதியில் பாலத்தில் மோதி டிப்பரின் டயர் வெடித்துள்ளது.

இதைத் தொடர்ந்து  டிப்பர் வாகனத்தை அந்த இடத்திலேயே விட்டுவிட்டு இளைஞர்களை கடத்தி சென்றுள்ளனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு புதுக்குடியிருப்பு காவல்துறையினர்  சென்ற வேளை கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் டிப்பர் வாகனத்தினை விட்டு தப்பி சென்ற நிலையில், கடத்தப்பட்ட மூன்று இளைஞர்களையும் மீட்டுள்ளனர். அவர்களை முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்கள்.

டிப்பர் வாகனம் மீட்கப்பட்டு புதுக்குடியிருப்பு காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

வாகனத்தின் உரிமையாளர் தொடர்பிலும் வாகன சாரதி தொடர்பிலும் புதுக்குடியிருப்பு காவல்துறையினர்   விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments