மீண்டும் கடைகள் திறக்கின்றன?



ஜனாதிபதி தேர்தல் காலத்தில் மட்டும் சர்ச்சைக்குரிய வகையில் கடைதிறக்கும் தமிழ்த் தேசிய கட்சி மீ;ண்டும் களத்திற்கு வந்துள்ளது.

நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை ஒழித்து, நாடாளுமன்ற ஆட்சி அதிகாரமுள்ள முறைமையை வலியுறுத்தி தமிழ் தரப்புக்கள் ஒன்றிணைந்து போராட்டங்களை முன்னெடுக்கப் பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதன் முன்னோடி கலந்துரையாடல் எதிர்வரும் சனிக்கிழமை இடம்பெறவுள்ளது. கலந்துரையாடலுக்கு தமிழ் அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புக்கள், மனித உரிமை அமைப்புக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்புக்களிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

முயற்சிக்கான நகர்வை  தமிழ் தேசிய கட்சி முன்மொழிந்திருந்தது. அநேகமான தமிழ் கட்சிகள் இதனை ஏற்றுக் கூட்டு நகர்வாக திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என்.சிறீகாந்தா தெரிவித்துள்ளார்.

முதல்கட்டமாக தமிழ் தேசிய பரப்பிலுள்ள அரசியல் கட்சிகள், மற்றும் சிவில் அமைப்புக்கள், மனித உரிமைகள் அமைப்புக்களிற்கு கலந்துரையாடல் அழைப்பு விடுக்கப்படடுள்ளது.

எதிர்வரும் 18ஆம் திகதி முதலாவது பேரணி வடக்கின் ஏதாவது ஒரு மாவட்டத்தில் ஏற்பாடு செய்யலாமென, ஏற்பாட்டாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

தமிழ்த் தேசிய கட்சியின் தலைவர் என். சிறீகாந்தா கருத்து வெளியிடுகையில் “பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட இலங்கையின் அனேகமாக பிரச்சனைகளிற்கு தீர்வு காண்பதற்கு நிறைவேற்றதிகார ஆட்சிமுறை ஒழிப்பது முக்கியம். நிதி பொறுப்புக்கூறும் ஓர் அமைப்பு முறை உருவாக வேண்டும். நாடாளுமன்றத்திற்கு முழுமையான அதிகாரம் வழங்குவதே பொருத்தமானது.

முழு நாட்டுக்கும் இம்முயற்சி நல்லது. சிறுபான்மையினருக்கு விசேட நன்மைகள் உள்ளன. நிறைவேற்றதிகார முறைமை அல்லாத நாடாளுமன்ற ஆட்சி முறை, சிறுபான்மையினருக்கு இப்போதுள்ளதை விட ஓரளவு பாதுகாப்பான நிலைமையை ஏற்படுத்துமெனவும் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே பூகோள அரசியல் பேசிவந்த அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தற்போது இலங்கை எதிர்கட்சி அலுவலகம் சென்றுள்ளது.

இந்நிலையில் கோத்தாவிற்கு எதிராக தமிழ் மக்கள் திரள்வதான புதிய செய்தி சூக்குமம் சூடுபிடித்துள்ளது.


No comments