வேலை நாட்களை குறைக்க யோசனை !



நாட்டில் டொலர் பற்றாக்குறையால் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டினால் பாரிய பொருளாதார வீழ்ச்சிக்கு முகங்கொடுப்பதை தவிர்க்க அரசாங்கத்திடம் இலங்கை மத்திய வங்கி சில யோசனைகளை முன்வைத்துள்ளது.

எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பில் கடந்த செவ்வாய்கிழமை இடம்பெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தின் போதே மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலினால் இந்த யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதன்படி, பெற்றோலியக் கூட்டுத்தாபனம், இரண்டு அரச வங்கிகளுக்கும் செலுத்தவேண்டிய சுமார் 560 பில்லியன் ரூபாவை (280 மில்லியன் ரூபா) நிலுவையில் வைத்துள்ளது.

எனவே, மேலும் கடன் வழங்கினால் வங்கிகள் நட்டமடையக்கூடும்.எனவே, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு தொடர்ந்தும் கடனை வழங்கினால் அரசின் இரண்டு வங்கிகளும் வீழ்ச்சியடைவதை தடுப்பது கடினமாகும். எனவே, அதற்கான கடனை உடனடியாக நிறுத்த முன்மொழியப்பட்டுள்ளது.

எரிபொருள் விற்பனையால் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு ஏற்படும் நஷ்டத்தை குறைக்கும் வகையில் எரிபொருள் விலையை கணிசமான அளவு அதிகரிக்கவும் மத்திய வங்கி பரிந்துரைத்துள்ளது.

அத்துடன், வாரத்தில் வேலை நாட்களின் எண்ணிக்கையை 4 ஆக குறைத்து, வேலை நேரத்தை அதிகரிக்கவும் மத்திய வங்கி முன்மொழிந்துள்ளது.

இதற்கமைய, நிறுவனங்களின் செயற்பாடுகள் காலை 7.30 மணிக்கு ஆரம்பமாகி மாலை 5.30 வரை தொடர வேண்டும் என மத்திய வங்கி பரிந்துரைத்துள்ளது.

அதேபோல், நிறுவனங்களுக்குள் சேவையாற்றும் ஊழியர்களை காலை 9 மணி முதல் 3 மணி வரை பணிபுரிய அனுமதிக்க வேண்டும் எனவும், அவர்களை முன்னதாக வீட்டிற்கு செல்ல அனுமதிக்க வேண்டும் எனவும் அந்த யோசனையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments