பழைய இரும்பு திருட்டில் முப்படைகளும்?



யாழ்ப்பாணத்தில் பழைய  இரும்பு வியாபாரத்தில் முப்படைகளும் மும்மரமாகியுள்ளன.

மயிலிட்டி துறைமுகத்தில் பழைய இரும்பு விற்பனை செய்த கடற்படையினர் முன்னதாக அகப்பட்ட நிலையில் தற்போது இராணுவம் அகப்பட்டுள்ளது.

மின்சார சபையின் சுன்னாகம் மின்நிலையத்தில் இருந்த பழைய இரும்புகளை திருட்டுத்தனமாக விற்பனை செய்த இராணுவ வீரரை, எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, மல்லாகம் நீதிமன்றம், இன்று (19) உத்தரவிட்டுள்ளது.

காங்கேசன்துறை இராணுவ முகாமைச் சேர்ந்த லான்ஸ் கோப்ரல் என்பவரே, இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சுன்னாகம் மின்சார நிலையத்திற்கு கடந்த காலங்களில் இருந்து இராணுவத்தினரே பாதுகாப்பை வழங்கி வருகின்றனர்.

இதன்போது கடமையில் ஈடுபட்டிருந்த மேற்படி இராணுவ வீரர், திருட்டுத்தனமாக மின்சார நிலையத்தில் இருந்த பழைய இரும்புகளை வீதியால் சென்ற இரும்பு வியாபாரிக்கு விற்பனை செய்துள்ளார்.

பழைய இரும்புகள் திருட்டு போன சம்பவம் தொடர்பில் மின்சார சபையின் அதிகாரிகளால் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

விசாரணைகளை மேற்கொண்டிருந்த சுன்னாகம் பொலிஸார், கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவ வீரரை, இன்றைய தினம்(19) கைதுசெய்தனர்.

அவரை மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் ஆனந்தராஜா அவர்களின் வாசஸ்தலத்தில்   முற்படுத்தியபோது, விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments