புத்தாண்டு:தற்போதைக்கு இல்லை!




ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருவதால், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களை ஒத்தி வைக்க வேண்டும் அல்லது ரத்து செய்ய வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.


தென் ஆப்ரிக்காவில் உருமாறிய ஒமைக்ரான் வகை வைஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதனால், உலக நாடுகள் மீண்டும் பல்வேறு வகையான கட்டுப்பாடகளை விதித்து வருகின்றன. அமெரிக்காவில், ஒமைக்ரானால் முதல் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. 50 வயது மதிக்கத்தக்க நபர், ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். உடல்நலம் பாதித்த நிலையில் காணப்பட்ட அந்த நபர், கோவிட் தடுப்பூசி செலுத்தி கொள்ளவில்லை என அமெரிக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இந்நிலையில், உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் டெட்ரஸ் அதானம் கூறியதாவது: ஒமைக்ரான் வைரஸ், டெல்டாவை விட பல மடங்கு வேகமாக பரவி வருகிறது. தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களும், வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களும், ஒமைக்ரானால் மீண்டும் பாதிக்கப்படலாம்.


இந்த பெருந்தொற்றினால், அனைவரும் சோர்வடைந்துள்ளோம். குடும்பம் மற்றும் நண்பர்களுடன் நேரத்தை செலவிடவும்,வழக்கமான வாழ்க்கையை வாழவும் அனைவரும் விரும்புகிறோம்.


எனவே, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களை தள்ளி வைக்கலாம் அல்லது ரத்து செய்யலாம். வாழ்க்கையை இழப்பதை விட நிகழ்ச்சிகளை தள்ளி வைப்பதே சிறந்தது. தற்போது கொண்டாடிவிட்டு பிறகு வருத்தப்படுவதை விட, தற்போது ஒத்திவைத்துவிட்டு பிறகு கொண்டாடலாம். கடினமான முடிவுகள் அவசியம்.


2022 இறுதிக்குள் உலகில் அனைத்து நாடுகளிலும் 70 சதவீத மக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ளும்போது, அடுத்தாண்டு மத்தியில் இந்த பெருந்தொற்று முடிவுக்கு வரும். கோவிட் பெருந்தொற்று குறித்து சீனா கூடுதல் தகவல்களை தர வேண்டும். இது, எதிர்காலத்தில் பெருந்தொற்றை சமாளிக்க உதவியாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments