கடைசி காலத்திலேனும் அமைதி வேண்டும்!



சிறைவாசத்தால் மன அழுத்தம், உடல் உபாதைகளால் நளினி அவதிப்பட்டு வருகிறார். மனிதநேய அடிப்படையில் அவருக்கு பரோல் வழங்க வேண்டும் என்று நளினியின் தாயார் முதல்வர் ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். என் இறுதி காலத்திலாவது மகள் நளினி என்னுடன் வாழ ஏங்குகிறேன் என்று முதல்வரிடம் உருக்கமாக கோரிக்கை வைத்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கடந்த 1991ஆம் ஆண்டு மே 21 ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஏழு பேரில் நளினியும் ஒருவர். 30 ஆண்டுகாலமாக 7 பேரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்

ஏழு தமிழர் விடுதலை தொடர்பாக கடந்த 2018ஆம் ஆண்டு செப்டம்பர் 9ஆம் தேதி தமிழ்நாடு அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது. ஆனால் ஆளுநர் எந்த முடிவும் எடுக்காததால், தீர்மானம் நிறைவேற்றிய மறுநாள் முதல் தன்னை சட்டவிரோதமாக சிறையில் அடைத்து வைத்திருப்பதாகவும், விடுதலை செய்ய வேண்டுமெனவும் கூறி நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

ஆனால் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், "தண்டனை குறைப்பு தொடர்பாக குடியரசு தலைவர் தான் முடிவெடுக்க தகுதியானவர் என கூறி, தீர்மானத்தை மத்திய அரசுக்கு ஆளுநர் அனுப்பி வைத்தார்.

அதை மத்திய அரசு சட்டப்படி பரிசீலிக்கும். உச்ச நீதிமன்றம் அளித்த பல்வேறு தீர்ப்புகளின்படி, நளினியின் மனு ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என்பதால் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சிறையில் உள்ள நளினியை பரோலில் விடுவிக்க வேண்டும் என்று அவரது தாயார் பத்மா, முதல்வர் தனிப் பிரிவில் மனு அளித்துள்ளார். அதில், வயது மூப்பின் காரணமாக உடல் மற்றும் உளவியல் பிரச்சினையால் அவதிப்பட்டு வருகிறேன். என் இறுதி காலத்திலாவது மகள் நளினி என்னுடன் வாழ ஏங்குகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

நளினி, 31 ஆண்டுகள் சிறைவாசத்தால் மன அழுத்தம், உடல் உபாதைகளால் அவதிப்பட்டு வருகிறார். எனவே மனிதநேய அடிப்படையில் அவருக்கு பரோல் வழங்க வேண்டும். 7 பேர் விடுதலையில் ஆளுநர் முடிவெடுக்கலாம் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக அறிந்தேன். அதன்படி ஆளுநரிடம் தாங்கள் நினைவூட்டி விடுதலைக்கு ஆவன செய்ய கேட்டுக் கொள்கிறேன் என்று உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார். நளினியின் தாயாரின் கோரிக்கையை ஏற்று பரோல் வழங்க முதல்வர் உத்தரவிடுவாரா என்ற எதிர்பார்ப்பு தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

No comments