இங்கிலாந்து வரலாற்றிலேயே இதுதான் மிகப் பெரிய விவாகரத்து இழப்பீடு


துபாய் அரசர் ஷேக் முகமது பின் ரஷித்தின் 6ஆவது மனைவி ஹயா பினட்டுக்கு 550 மில்லியன் பவுண்ஸ்கள் விவாகரத்து இழப்பீடாகக் கொடுக்க வேண்டும் என லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

துபாய் அரசர் ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் (72). இவரது 6ஆவது மனைவி ஹயா பின்ட் அல் ஹூசைன் (47). இவர்களுக்கு 2004 ஆம் ஆண்டு திருமணம் ஆனது. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். ஹயா, மன்னர் அப்துல்லாவின் உறவினர் பெண் ஆவார்.

இந்த நிலையில் அரசருக்கும் மனைவி ஹயாவுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து ஹயா கடந்த மே மாதம் முதல் தலைமறைவானார். இந்த நிலையில் ஹயா பின்ட் தனக்கு கட்டாயத் திருமணம் நடத்தப்பட்டதாக புகார் கூறிய ஹயா, பாதுகாப்பு கேட்டு லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த விவாகரத்து விசாரணை நடந்த போது தனது குழந்தைகளை துபாய்க்கு அனுப்புமாறு அரசர் ஷேக் முகமது தரப்பிலிருந்து கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் இந்த கோரிக்கையை லண்டன் நீதிமன்றம் நிராகரித்தது. வழக்கு விசாரணையின் போது ஹயா கூறுகையில் நான் சுதந்திரமாக இருக்க விரும்புகிறேன். குழந்தைகளுக்கு சுதந்திரமாக இருக்க வேண்டும் என்றும் வாக்குமூலம் அளித்தார். 

இதையடுத்து ஹயா தொடர்ந்த வழக்கில் லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில் துபாய் அரசர் ஷேக் முகமது இழப்பீடாக ஹயா பின்ட் மற்றும் 2 குழந்தைகளுக்கு 550 மில்லியன் பவுண்ஸ்கள்  வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வழக்கில் நீதிபதி கூறுகையில் பாதுகாப்பை தவிர ஹயா வேறு எந்த அங்கீகாரத்தையும் கேட்கவில்லை. திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட முறிவு காரணமாக ஹயா இழந்த சொத்துகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். ஹயாவின் பிரட்டிஷ் மாளிகையை பராமரிக்கவும் குழந்தைகளின் கல்வி, பராமரிப்பு, பெரியவர்கள் ஆனதும் அவர்களது பராமரிப்புக்காகவும் இழப்பீடு வழங்க வேண்டும் என்றார். இந்த பணத்தை 3 மாத காலத்திற்குள் ஹயாவிடம் வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார். குழந்தைகளின் பராமரிப்புக்காக ஆண்டுக்கு 11.2 மில்லியன் பவுண்டுகளை வழங்க வேண்டும். இங்கிலாந்து வரலாற்றிலேயே இதுதான் மிகப் பெரிய விவாகரத்து இழப்பீட்டுத் தொகையாக கருதப்படுகிறது.

No comments