ஒற்றுமை முக்கியம்!!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையை சிதைப்பதற்கு சில தரப்புக்கள் முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ள அதன் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் நாட்டில் அரசியலமைப்பை உருவாக்க முனையும் தற்போதைய முக்கிய தருணத்தில் ஒற்றுமை அவசியம் என்று வலியுறுத்தியுள்ளார்.

கடந்த புதன் கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருக்கும், பங்காளிக்கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று நடைபெற்றிருந்தது. 

அச்சந்திப்பின் ஈற்றில் கூட்டமைப்பில் உள்ள தற்போதைய குழப்பங்களுக்கு முடிவுகட்டும் வகையில் சம்பந்தன் அறிக்கையொன்றை வெளியிடுவதாக தீர்மானிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் அவர் நேற்று சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், 

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஏனைய பொறுப்புக்களை வகிக்கும் அங்கத்தவர்கள் பொதுவாக வடக்கு, கிழக்கு மாகாண மாவட்டங்களில் வசிக்கிறார்கள். 

கொரோனா வைரஸின் தாக்கம் தனியாகவும், குழுக்களாகவும் கலந்துரையாடல்களை முன்னெடுப்பதற்கு தடையாக அமைந்துள்ளது. இதன் விளைவாக சில விடயங்கள் தொடர்பில் தெளிவற்ற நிலைமை உருவாகியுள்ளது.

தேசிய பிரச்சினைக்கான அரசியல் தீர்வொன்றினை அரசியல் யாப்பினூடாக பெற்றுக்கொள்வதே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மிக பிரதானமான குறிக்கோளாகும். 

இந்த நாட்டிலே தமது பூர்வீகத்தினை கொண்டுள்ள மக்களின் இறையாண்மையானது முழு நாட்டிலும் அவர்களுக்கான ஆட்சி அதிகாரம், அடிப்படை உரிமைகள் மற்றும் வாக்குரிமை என்பவற்றினை உள்ளடக்கும் அவர்களின் வரலாற்று ரீதியான பூர்வீகம் மற்றும் இலங்கை அரசாங்கமும் தலைவர்களும் உள்நாட்டிலும் சர்வதேசத்திற்கும் கொடுத்த வாக்குறுதிகளின் அடிப்படையிலும் இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ள சர்வதேச உடன்படிக்கைகள், மற்றும் பிரமாணங்களின் அடிப்படையிலும் அமையப்பெற்றதாகும். 

இந்த அடிப்படை விடயம் குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு மிக தெளிவாகவும் உறுதியாகவும் தனது நிலைப்பாட்டினை தெரிவித்துள்ளது.

ஏனைய சில விடயங்கள் தொடர்பில், ஒருங்கிணைத்த கூட்டங்கள் இடம்பெறாமையானது சில தெளிவற்ற நிலைமைகளையும் குழப்பங்களையும் தோற்றுவித்துள்ளது.

அதேவேளை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையை சிதைப்பதற்கும் சில சக்திகள் முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. ஒற்றுமையை உறுதி செய்யும் முகமாக இந்த விடயங்கள் தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்துரையாடல்கள் இடம்பெறும்.

முழுமையான அனைத்தும் உள்ளடங்கிய ஒரு அரசியல் யாப்பினை இந்த நாடு உருவாக்க முனைவதாக கூறப்படுகின்றது. இந்த முக்கிய தருணத்தில் ஒற்றுமையை பேணுவது அடிப்படையானதாகும். 

மக்கள் மத்தியில் ஒரு தெளிவு இருக்கவேண்டும் மாறாக அவர்களை குழப்பக்கூடாது. ஒன்றுபட்ட பிளவுபடாத நாட்டிற்குள், சமத்துவம் நீதி மற்றும் சுயகௌரவம் என்பவற்றின் அடிப்படையில் ஒரு தீர்வினை எட்டும் எமது குறிக்கோளில் உறுதியாக பயணிப்பதற்கு தெளிவின்மைகளையும் குழப்பங்களையும் தவிர்த்துக்கொள்ளுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


No comments