அரசியல் கைதிகள் நால்வர் விடுதலை!!

 தமிழ் அரசியல் கைதிகள் நான்கு பேர், நிரபராதிகள் என இனங்காணப்பட்டதையடுத்து வவுனியா மேல் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.


குரலற்றவர்களின் குரல் அமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இவ்விடயம் தொடர்பாக மேலும் கூறியுள்ளதாவது, அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதிகளான யாழ்ப்பாணத்தை சேர்ந்த நடேசன் தருமராசா, வவுனியாவைச் சேர்ந்த ஜோசப் செபஸ்ரியான், கிளிநொச்சியை சேர்ந்த நடராசா சர்வேஸ்வரன் மற்றும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த கண்ணதாசன் ஆகியோரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இதில் நடேசன் தருமராசா, தனது ஒருவருட புனர்வாழ்வை முடித்து இயல்பு வாழ்க்கையில் ஈடுபட்டிருந்த வேளையில், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கடந்த 2013 ஆம் ஆண்டு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.

இதன்போது ஜோசப் செபஸ்ரியான் என்பவரும் கைது செய்யப்பட்டு, இருவருக்கும் கடந்த 2018 ஆம் ஆண்டு வவுனியா மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

அந்தவகையில் வழக்கு விசாரணைகளின் அடிப்படையில் அவர்கள், வவுனியா மேல் நீதிமன்றத்தினால் நிரபராதிகள் என இனங்காணப்பட்டதையடுத்து, 8 வருடங்களின் பின்னர் நேற்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கடந்த 2016 ஆம் ஆண்டு நடராசா சர்வேஸ்வரன் கைது செய்யப்பட்டு, கடந்த 2018 ஆம் ஆண்டு அவருக்கு எதிராக வவுனியா மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த வழக்கு விசாரணைகளின் அடிப்படையில் நேற்று நிரபராதியென இனங்காணப்பட்டு நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு கட்டாய ஆள்சேர்ப்பில் ஈடுபட்டார் என்ற குற்றத்துக்காக கைது செய்யப்பட்டு, தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் நுண்கலைத் துறை விரிவுரையாளர் கண்ணதாசனையும் வவுனியா மேல் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments