மணல் டிப்பர் மீது துப்பாக்கிச் சூடு! ஒருவர் காயம்!!

கிளிநொச்சி - புளியம்பொக்கணை, நாகேந்திரபுரம் பகுதியில், இன்று திங்கட்கிழமை (21) அதிகாலை, சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் மீது

இராணுவத்தினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில், ஒருவர் காயமடைந்துள்ளார்.

நாகேந்திரபுரம் பகுதியில், இன்று அதிகாலை 4 மணியளவில், சட்டவிரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்துவதற்காக அமைக்கப்பட்டிருந்த சோதனைச் சாவடி ஊடாக சென்ற டிப்பர் ஒன்றை நிறுத்துமாறு, படையினர் சமிஞ்கை காட்டியுள்ளனர்.

இந்த சமிஞ்கையை மீறி டிப்பர் பயணித்தமையால், அதன் மீது, படையினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர்.

இதன்போது சாரதியின் உதவியாளர் காயமடைந்த நிலையில், தருமபுரம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாம் மணல் ஏற்றுவதற்கான அனுமதியுடனேயே பயணித்ததாகவும் இருந்தபோதும், இராணுவத்தினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாகவும், சாரதி தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில், தர்மபுரம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments