கொரோனா தடுப்பூசி! காப்புரிமை விலக்கை எதிர்க்கும் ஜேர்மனி


உலகம் கொரோனா வைரஸ் தொற்றின் கோரப்பிடியில் சிக்கியுள்ள தருணத்தில் உலகமெங்கும் தடுப்பூசி வினியோகம் அதிகரிக்க வேண்டும் என்றால் தடுப்பூசிக்கான காப்புரிமை தொடர்பான விதிகளை, உலக வர்த்தக அமைப்பின் அறிவுசார் சொத்துரிமை விதிகளில் இருந்து விலக்க வேண்டும் என்று இந்தியாவும், தென் ஆப்பிரிக்காவும் குரல் கொடுத்து வந்ததன.

இந்த திட்டத்துக்கு ஆதரவாக சுமார் 60 நாடுகள் குரல் கொடுத்து வந்தன. ஆனாலும் இந்தியாவும், தென் ஆப்பிரிக்காவும்தான் இதில் முன்னணியில் இருந்து வந்தன. கடந்த 6 மாத காலமாக இதற்கான முயற்சியில் இந்தியாவும், தென் ஆப்பிரிக்காவும் இறங்கின. இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு ஆதரவு தர வேண்டும் அமெரிக்காவின் ஜோ பைடன் நிர்வாகத்தை ஜனநாயக கட்சியைசேர்ந்த 100 எம்.பி.க்கள் வலியுறுத்தினர். இந்த நிலையில் சுவிட்சர்லாந்து நாட்டில் ஜெனீவா நகரில் உலக வர்த்தக அமைப்பின் பொதுச்சபை கூட்டம் நேற்று முன்தினம் தொடங்கியது.

அப்போது அறிவுசார் சொத்து விதிகளில் இருந்து, தடுப்பூசிக்கான காப்புரிமையை விலக்கி வைக்கவேண்டும் என்ற இந்தியா உள்ளிட்ட நாடுகளின் நிலைப்பாட்டுக்கு அமெரிக்கா தனது ஆதரவை தெரிவித்தது.  உலக வர்த்தக அமைப்பின் 100-க்கும் மேற்பட்ட உறுப்பு நாடுகள், தடுப்பூசி மீதான காப்புரிமை விலக்கத்துக்கு ஆதரவாக உள்ளன.

எனினும், காப்புரிமை விலக்கம் அளிக்க கூடாது என ஜெர்மன் கூறியுள்ளது. அறிவுசார் சொத்துகளுக்கு பாதுகாப்பு அளிப்பது மட்டுமே புதுமை கண்டுபிடிப்புகளுக்கு வழிவகுக்கும். எனவே, இந்த விவகாரத்தில் காப்புரிமை நிலை தொடர வேண்டும் என ஜெர்மன் வலியுறுத்தியுள்ளது. 

எனினும், இந்த விவகாரத்தில்  முடிவு எடுப்பதற்காக உலக வர்த்தக அமைப்பின் அறிவுசார் சொத்துகள் குழு அடுத்த மாதம் கூடும் என தகவல்கள் கூறுகின்றன. இதை உலக வர்த்தக அமைப்பின் அறிவுசார் சொத்துகள் குழு ஏற்று, காப்புரிமை விதிகளுக்கு விலக்கு அளித்து ஒப்புதல் வழங்கினால் அது தடுப்பூசி உற்பத்தியையும், வினியோகத்தையும் அதிகரிக்க பக்கபலமாக அமையும். அது மட்டுமின்றி பொருளாதாரத்தில் நலிவுற்ற நாடுகளுக்கு இன்னும் மலிவான விலையில் தடுப்பூசி கிடைக்க வழிவகுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments