காவல்படை விவகாரம்:நாலாம் மாடிக்கு அழைப்பு!



யாழ்ப்பாணம் மாநகர காவல்படையினரை விசாரணை என்ற பேரில் மிரட்டி முடக்க இலங்கை அரசு மும்முரமாகியுள்ளது.

தண்டப் பணம் அறவிடும் நடைமுறையை கையாள்வதற்காக அமைக்கப்பட்ட யாழ்ப்பாணம் மாநகர காவல் படையின் உத்தியோகத்தர்கள் ஐந்து பேரையும்  வாக்குமூலம் வழங்க கொழும்பு வருமாறு பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் அழைத்துள்ளனர்.

கொழும்பு நாலாம் மாடியில் அமைந்துள்ள பயங்காரவாத விசாரணைப் பிரிவின் அலுவலகத்துக்கு வரும் 11ஆம் திகதி காலை 9 மணிக்கு சமுகமளிக்குமாறு அவர்கள் ஜந்து பேருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


யாழ்ப்பாணம் மாநகரத்தினை தூய்மையான நகரமாகப் பேணுவதற்காக மாநகர சபை ஊழியர்கள் ஐவர் மாநகர காவலர்களாக தனியான சீருடை அணிந்து கடந்த மாதம் கடமைக்கு அமர்த்தப்பட்டனர்.  

எனினும் உத்தியோகத்தர்கள் அணிந்திருந்த சீருடை தமிழீழ விடுதலைப் புலிகளின் காவல்துறையின் சீருடைக்கு ஒத்தது என சர்ச்சை எழுந்தது.


இந்தச் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன், பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் தற்போது பணியாளர்களை அச்சுறுத்த இலங்கை காவல்துறை முற்பட்டுள்ளது.


No comments