தொடர்கின்றது இரணைதீவு மக்களின் போராட்டம்!



கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்களை இரணைதீவு பகுதியில் புதைப்பதென்ற விடயத்தில் இலங்கை அரசு தொடர்ந்தும் விடாப்பிடியாக உள்ளது.

இந்நிலையில் எதிர்ப்பு தெரிவித்து நேற்றைய தினம் முதல் இரணைமாதா நகர் பகுதியில் மக்கள் மற்றும் பங்குத்தந்தையர்கள் இணைந்து போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.

இருப்பினும் குறித்த பகுதியில் உடல்களை புதைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்றைய தினமும் இரண்டு இடங்களில் மக்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இரணைதீவு பிரதான இறங்குதுறை மற்றும் உடல்களை அடக்கம் செய்வதற்கு குழிகள் தோண்டப்பட்ட இடம் ஆகியவற்றில் மக்கள் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

நேற்றைய தினம் இலங்கை மனித உரிமை ஆணைக்குழு மற்றும் மீன்பிடி நீர்வள அபிவிருத்தி அமைச்சர் உட்பட பலருக்கு கு இரணைதீவு மக்களால் நேரடியாகச் சென்று எதிர்ப்பு மகஜர் வழங்கி வைக்கப்பட்டது.

எனினும் இதுவரை சடலங்களை அடக்கம் செய்வதற்கான மாற்று இடம் தெரிவு செய்யப்படவோ அல்லது சடலங்களை அடக்கம் செய்யும் பணிகளோ இடைநிறுத்தப்படாத நிலையில் மக்கள் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை இரணைதீவு பகுதிக்குச் செல்லும் மக்களிடம் கடற்படையினர் அச்சுறுத்தும் விதமாக செயற்படுவதாகவும், தீவு பகுதியில் வசிக்கும் மக்கள் தீவுக்கு செல்வதற்கு முன் அடையாள அட்டையை கடற்படையினரிடம் ஒப்படைத்துச் செல்ல வேண்டும் என பணிக்கப்படுவதாகவும் பொது மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.


No comments