மிரட்டுகின்றது இலங்கை காவல்துறை!



மட்டக்களப்பு மாமாங்கப் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் பல அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தை முடக்கும் நோக்கில் இன்றும் மோட்டார் சைக்கிளில் வந்த பொலீசார் போராட்டகாரர்களின் பெயர்களை கேட்டு அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டனர்.

இன்று (15) காலை மட்டக்களப்பு மாமாங்க ஈஸ்வரர் ஆலயத்திற்கு முன்பாக சுழற்சி முறையிலான உணவுதவிர்ப்பு போராட்டம் நடைபெறும் இடத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்த பொலீசார் போராட்டக்காரர்களை அச்சுறுத்தும் வகையில் போராட்டத்தில் அமர்ந்திருந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் பெயர்களை கேட்டு  அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டுள்ளனர்.

இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பாதிக்கப்பட்ட மக்களின் போராட்டத்தை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்ற நோக்கில் தொடர்ச்சியாக மட்டக்களப்பு பொலீசார் பல்வேறு அச்சுறுத்தல்களை திட்டமிட்டு ஏற்படுத்தி வருகின்றனர்.

ஏற்கனவே உண்ணாவிரதப் பந்தலை இரவோடு இரவாக அகற்றிய பொலீசார் தற்போது நடு வெயிலில் அமர்ந்து போராடிவரும் தங்களை அச்சுறுத்தும் வகையில் பொலீசார் செயற்பட்டு வருவதாக போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments