ஆட்சி அதிகாரம் தமிழர்களிடம் இருக்க வேண்டும் - சம்பந்தன்

தமிழர்கள் தமது கௌரவத்தை, சமத்துவத்தை, நீதியைப் பாதுகாத்துக்கொள்வதற்கு ஆட்சியதிகாரம் அவர்களின் கைகளில்

இருக்கவேண்டும். 

ஆகவே எமது சுயநிர்ணய உரிமை மதிக்கப்பட வேண்டும் என்று புதிய அரசியலமைப்பு உருவாக்கக்குழுவிடம் வலியுறுத்தியிருப்பதாகத்


தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள உத்தேச புதிய அரசியலமைப்பு உருவாக்கக்குழுவிடம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் தமது யோசனைகளைக் கையளித்தனர்.

அதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்,

எமது உள்ளக சுயநிர்ணய உரிமை மதிக்கப்பட வேண்டும். தமிழ்மக்கள் தமது கௌரவத்தையும் சமத்துவத்தையும் நீதியையும் பாதுகாத்துக்கொள்வதற்கு ஆட்சியதிகாரம் அவர்களின் கைகளில் இருக்கவேண்டும். இதனை புதிய அரசியலமைப்பு உருவாக்கக்குழுவிடம் மிகவும் உறுதியாக வலியுறுத்தியிருக்கின்றோம்.

இந்தப் பிரச்சினை பல வருடகாலமாகத் தொடர்ந்து வருகின்றது. அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர், இப்பிரச்சினைக்குத் தீர்வினை வழங்குவதற்குப் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 

இந்நிலையில் தமிழ்மக்களுக்கு நியாயமானதும் அர்த்தமுள்ளதுமான அதிகாரப்பரவலாக்கமொன்று வழங்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்து அரசியலமைப்பு உருவாக்கக்குழுவிடம் எடுத்துரைத்தோம்.

புதிய அரசியலமைப்பு உருவாக்க நடவடிக்கைகளுக்குத் தொடர்ந்தும் ஒத்துழைப்பை வழங்குவதற்குத் தயாராக இருக்கின்றோம். 

எனினும் பெரும்பான்மையினத்தவரின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டு, தமிழ்மக்களுக்கும் சமளவான உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார். 

No comments