பேச்சு ஆரம்பம்:யாழ்;.பல்கலை முற்றுகையினுள்?



யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம், நிர்வாகத்தால் இரவோடு இரவாக இடித்தழிக்கப்பட்டமைக்கு எதிராக தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் மாணவ பிரதிநிதிகளை பேச்சுக்கு நிர்வாகம் அழைத்துள்ளது.

மாணவ பிரதிநிதிகள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் சகிதம் பேச்சுக்கள் தொடரும் நிலையில் பேச்சின் முடிவுகள் இதுவரை வெளியாகவில்லை.

போராட்டத்தில் அனைத்து தரப்பினரையும் இணைந்து கொள்ளுமாறு யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பும் விடுத்துள்ளது.

யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம், பல்கலைக்கழக நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் நேற்று வெள்ளிக்கிழமை இரவோடு இரவாக இடித்தழிக்கப்பட்டுள்ளது.



முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டப் போரில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நினைவாக, யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் நினைவிடம் ஒன்று கடந்த 2018 ஆம் ஆண்டு மாணவர்களால் அமைக்கப்பட்டது.

நேற்றிரவு தூபி இடிக்கப்பட்ட செய்தி அறிந்து மாணவர்களும் அரசியல் பிரதிநிதிகளும் சமூக ஆர்வலர்களும் பல்கலைக்கழக பிரதான வாயிலில் நேற்று இரவு முதல் தொடர்ச்சியாக திரண்டிருந்தர்.

குறித்த செயற்பாட்டினை கண்டித்து, மாணவர்கள், அரசியல் பிரமுகர்கள் நேற்று இரவு முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



இந்நிலையிலேயே குறித்த போராட்டதை வலுசேர்க்கும் முகமாக அனைத்து தரப்பினரையும் இணைந்து கொள்ளுமாறு யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments