இலங்கைக்கும் கொரானா தடுப்பூசி?


சர்வதேச ரீதியில் காணப்படும் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளில் இலங்கைக்குப் பொருத்தமானது எது என்பதை 2021 ஜனவரி அல்லது பெப்ரவரியில் அறிவிக்க எதிர்பார்த்துள்ளோம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட மருத்துவர் அசேல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

அத்தோடு கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்களை தகனம் செய்யும் தீர்மானத்தில் சுகாதார அமைச்சு ஸ்திரமாகவுள்ளது.

எனினும் அது தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்டுள்ள விசேட நிபுணர்கள் அடங்கிய குழு அறிக்கை கிடைத்தவுடன் இந்தத் தீர்மானத்தின் அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பிலும் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:

இவ்வருடம் ஓகஸ்ட் மாதம் இலங்கைக்குப் பொருத்தமான கொரோனா தடுப்பூசி எது என்பது தொடர்பில் ஆராய்வதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டது.

அந்தக் குழுவினால் தற்போதும் இவ்விடயம் தொடர்பில் ஆராயப்பட்டு வருகிறது. இந்தக் குழுவினால் உலகில் காணப்படும் சகல கொரோனா தடுப்பூசிகள் தொடர்பிலும் மதிப்பீடு செய்யப்பட்டு அவற்றில் இலங்கைக்கு எது பொருத்தமானது எனத் தீர்மானிக்கப்படும்.

தடுப்பூசி தொடர்பில் அவதானம் செலுத்துவதற்கு விசேட ஜனாதிபதி செயலணியும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

இந்தச் செயலணியின் மூலம் இராஜதந்திர மட்டத்தில் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன.

2021 ஜனவரி அல்லது பெப்ரவரியில் எவ்வகையான தடுப்பூசியை பெற்றுக் கொள்வது, எந்தளவில் பெற்றுக்கொள்வது, எந்தெந்த வயது பிரிவினருக்கு அதனை வழங்குவது என்பது தொடர்பில் மக்களுக்கு அறிவிக்க எதிர்பார்த்துள்ளோம்.

சுற்றுலாத்துறை நடவடிக்கைகளுக்காக விமான நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இதன்போது சுற்றுலாப்பயணிகள் விமான நிலையத்திலிருந்து ஹோட்டல்களுக்கு செல்லும் போது அவர்கள் செல்லும் பேருந்து சாரதி மற்றும் நடத்துநர், ஹோட்டல் ஊழியர்கள் என்போர் குறிப்பிட்ட காலத்திற்கு அங்கிருந்து வெளியேறுவதற்கு வாய்ப்பளிக்கப்படமாட்டாது. அதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மாறாக அவர்கள் வெளியிடங்களுக்குச் சென்றாலும் சமூகத்தில் ஒன்றிணைவதற்கு வாய்ப்பளிக்கப்படமாட்டாது.

அத்தோடு இவ்வாறான சுற்றுலாத்துறை சேவையில் ஈடுபடுவோரை சேவை நிறைவில் மேலும் 14 நாள்கள் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

No comments