சட்டவிரோத கடத்தல்! 5711 கிலோ கிராம் மஞ்சள் கட்டிகளுடன் 6 பேர் கைது!!


சட்டவிரோதமான முறையில் இந்தியாவிலிருந்து படகு மூலம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட 5711 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் கட்டிகளுடன் 6 சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

கற்பிட்டி குதிரைமலை கடற்கரைப் பகுதியில் வைத்து இந்திய தாவ் படகு மூலமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட குறித்த மஞ்சள் கட்டிகள் பொதி செய்யப்பட்டிருந்த மூடைகளை இரண்டு மீன்பிடிப் படகில் ஏற்றிக்கொண்டிருந்த போது சந்தேக கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது மீன்பிடிப் படகில் இருந்த இலங்கைப் பிரஜைகள் இருவரும், இந்திய தாவ் படகில் இருந்த நான்கு இந்தியப் பிரஜைகளும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து 3218 கிரோ கிராம உலர்ந்த மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில் இருந்து கற்பிட்டி பகுதியில் உரைப் பைகளில் பொதி செய்யயப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த மேலும் 1256 கிலோ கிராம் மற்றும் 1237 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் என்பனவற்றையும்; கைப்பற்றியுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களும், அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட இரண்டு மீன்பிடி படகுகளும், உலர்ந்த மஞ்சள் கட்டிகளும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.


No comments