பிரான்ஸ் மாவீரர் நாள் தொடர்பான அறிவித்தல்!!

தமிழ் மக்களின் சுதந்திரத்திற்காகவும், கௌரவத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும் தமது இன்னுயிரை அர்ப்பணித்துள்ள மாவீரர்களான

தியாகிகள், காலங்காலமாக எமது இதயக்கோவிலில் பூசிக்கப்படவேண்டியவர்கள்”

-தமிழீழத் தேசியத் தலைவர்-

அன்பார்ந்த பிரான்சு வாழ் தமிழீழ மக்களே!

எமது மண்ணில் ஒரு மாபெரும் எழுச்சிக்கு வித்திட்டுச் சென்ற வீரமறவர்களை நினைவுகூரும் நாள் நவம்பர் 27. இந் நாள் உலகப் பேரிடர் (கொவிட்19) காரணமாக ஈழத்தமிழ் மக்களால் ஒன்றுகூடி நினைவு கூரமுடியாத துர்ப்பாக்கிய சூழல் ஏற்பட்டுள்ளது. இது ஒரு தற்காலிக நிலைமையே! இதையும் தாண்டி, இருக்கும் வளங்களைக் கொண்டு மாவீரர் நாளை உணர்வுபூர்வமாக நினைவுகூருவதற்கு, சுகாதார விதிமுறைக்கமையவும், சட்டத்திற்குட்பட்டும் முழுமுயற்சி எம்மால் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்பதை அறியத்தருகின்றோம்.

12.11.2020 அன்று பிரெஞ்சுப் பிரதமரால் உள்ளிருப்பு காலம் டிசெம்பர் 1 வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அறியத்தரப்பட்டதைத் தொடர்ந்து, அதற்கமைவாக எமது தமிழீழத் தேசிய மாவீரர்நாள் நினைவுகூரல் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

பந்தலில் அமைந்துள்ள துயிலும் இல்லத்தில் வழமைபோல் எம்மாவீரர்கள் விதைக்கப்பட்ட கல்லறைகள் முன்பாக மட்டுப்படுத்தப்பட்ட மக்களோடு ஈகைச் சுடரேற்றி நினைவுகூரப்படும்.

சார்சேலில் அமைந்துள்ள லெப். சங்கர் நினைவுத்தூபி முன்பாக சார்சேல் நகரசபையின் அனுசரணையுடன் மட்டுப்படுத்தப்பட்ட மக்களோடு நினைவுகூரல் நடாத்தப்படும்.

எமது மாவீரர்களின் திருவுருவப்படம் வழமைபோல் மண்டபம் ஒன்றில் ஒழுங்கு செய்யப்பட்டு அவர்களுக்கான நெய்விளக்கேற்றி, மலர்தூவி மதிப்பளித்தல் நடாத்தப்படவுள்ளது.(இதில் பொதுமக்கள் கலந்துகொள்ளமுடியாதுள்ளது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.)

பொதுமக்களைத் தங்கள் இல்லங்களிலும், தமிழ் வர்த்தகர்களைத் தங்கள் வர்த்தக நிலையங்களிலும் குறித்த நேரத்தில் (13:37 மணி) மாவீரர் பொதுப்படத்திற்கு சுடரேற்றி நினைவுகூரும்படி உரிமையுடன்கேட்டுக்கொள்கின்றோம்.

இங்கு அமைந்துள்ள ஆன்மீக மையங்களில் (கோவில்) 13:35 மணிக்கு மணியோசை எழுப்பி, 13:37 மணிக்கு சுடரேற்றி மாவீரர்களுக்கு ஆன்மீக வழிமுறையில் வழிபாடு செய்யும் வண்ணம் கேட்டுக்கொள்கின்றோம்.

வெளிமாவட்டங்களிலும், பத்து இடங்களில் தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நினைவுகூரப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதற்கான பொதுப்படத்தை www.errimalai.com இல் தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.

தொடர்புகளுக்கு : தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரான்சு – மாவீரர்நாள் ஏற்பாட்டுக்குழு.

தொலைபேசி: 01.43.15.04.21 – 07.58.71.38.39 – 06.95.94.69.68

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.,"


No comments