ஸ்நேக் பாபுவிற்கு எதிராக ஆர்ப்பாட்டம்?

மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டி சுமனரத்ன தேரர் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளை சிறைப்பிடித்து மேற்கொண்ட

அடாவடியை கண்டித்தும் தமிழர் பாரம்பரிய காணிகளை புராதன பூமி என்ற பெயரில் கையகப்படுத்துவதை நிறுத்துமாறு கோரியும் மட்டக்களப்பு – பன்குடாவெளியில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

பிரதேச மக்களினால் இன்று (22) ஏற்பாடு செய்யபட்ட கவனயீர்ப்பு போராட்டத்தில் அரசியல்வாதிகள், விவசாயிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

இன நல்லுறவிற்கு பாதகம் ஏற்படும் வகையில் செயற்படும் தேரருக்கு எதிராக சட்ட நடவடிக்கையெடுக்க வேண்டும், அரச அதிகாரிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும். பொலிஸார் கடமையினை சரியான முறையில் மேற்கொள்ள வேண்டும் என கோசமிட்டு பதாதைகளை ஏந்தி தொல்பொருள் திணைக்களத்தினால் அடையாளப்படுத்தபட்ட காணியின் முன்றலில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஞானமுத்து அன்னபூரணம் என்பவருக்குச் சொந்தமான ஒன்பது ஏக்கர் வயற்காணியை 1964ம் ஆண்டு அவரது மருமகள்களான தருமலிங்கம் ராணியம்மா, தருமலிங்கம் யோகமலர், தருமலிங்கம் பரமேஸ்வரி ஆகியோருக்கு நன்கொடையாக வழங்கபட்டு அவர்களினால் அன்று முதல் விவசாயம் செய்கை பண்ணப்பட்டு வந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டி சுமனரத்ன தேரர் குறித்த பகுதியில் புராதன சிங்கள பௌத்த சின்னங்கள் இருந்ததாக கூறி அப்பிரதேசத்தில் அசாதாரண சூழ்நிலையினை உருவாக்கினார்.

இதனைத் தொடர்ந்து நீதிமன்ற அனுமதி பெறப்பட்டு, தொல்பொருள் அடையாளங்கள் காணப்பட்ட பகுதியில் மாத்திரம் அடையாளமிடப்பட்டு மிகுதி பகுதியில் விவசாயம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையிலேயே குறித்த பகுதியில் சுமனரத்ன தேரர் நேற்று அடாவடியில் ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments