காணிக்கு விண்ணப்பிக்க வடக்கு மக்களிடமும் கோரிக்கை?


அரச காணிகளில் ஆவணங்கள் எதுவுமின்றி அபிவிருத்திசெய்து அல்லது குடியிருக்கும் மக்களுக்கு சட்டரீதியாக ஆவணம் வழங்குதலை துரிதப்படுத்தல் நடவடிக்கையின் கீழ் மக்களை விண்ணப்பிக்க யாழ்.வர்த்தக சங்க தலைவர் கோரியுள்ளார். 

கடந்த காலங்களில் அரச காணிகளில் நிரந்தர வீடமைத்து, விவசாய நடவடிக்கையினை மேற்கொண்டு அல்லது ஏதேனும் அபிவிருத்தி நடவடிக்கையொன்றினை மேற்கொண்டுவரும் ஆவணங்கள் இல்லாத மக்களுக்கு சட்டரீதியான ஆவணங்களை பெற்றுக்கொடுப்பதற்காக நாடு முழுவதையும் உள்ளடக்கும் வகையில் விசேட அபிவிருத்தி திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதிலே கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்கள் தவிர்ந்தஏனைய மாவட்டங்களில் தகுதியானோரைத் தெரிவு செய்வதற்காக விண்ணப்பங்களை அரசாங்கத்தினால கோரப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையின்படி முதலீட்டு வாய்ப்புக்களை விரிவுபடுத்தல், உள்ளுர் பால் உற்பத்தியை ஊக்குவித்தல் மற்றும் உள்ளுர் உணவுபயிர் உற்பத்திக்கு அரசாங்க நிலங்களை உகந்த முறையில் நிர்வகித்தல் ஆகியவை அரசாங்கத்தின் முதன்மை நோக்கமாகும். அந்த நோக்கத்தின் முதல்படியாக, இலங்கை பிரஜைகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட காணி உரிமையினை உறுதிப்படுத்துவதற்காக சட்ட ரீதியான ஆவணங்கள் இல்லாமையினால் அரச காணியினை அபிவிருத்தி செய்துள்ள மக்களுக்கு துரிதமாகவும் மற்றும் சட்டபூர்வமான ஆவணங்களை வழங்க அரசினால் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக அரசாங்க நிலங்களை முறைசாரா முறையில் ஆக்கிரமித்துள்ளவர்களைமுறையாக அடையாளங்காணவும், அவர்களின் தகுதிகளை சரிபார்த்து சட்டபூர்வமான ஆவணங்களை வழங்கும் நோக்குடன் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது என 2192ஃ36 ஆம் இலக்கம் கொண்ட 2020ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 10ஆம் திகதி வியாழக்கிழமை அன்று வெளியிடப்பட்ட அரச அதிவிசேஷ வர்த்தமானி பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது.

ஆகவே இதுவரை அரச காணிகளில் சட்டரீதியான உரிமம் பெறாமல் இருக்கும் பொதுமக்கள் கூடிய கவனமெடுத்து இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சட்டரீதியான ஆவணங்களை பெற்றுக்கொள்வதற்கு இம்மாதம் 30ம் திகதிக்குள் கிராம சேவையாளர் ஊடாக பிரதேச செயலாளரிடம் விண்ணப்பங்களைக் கையளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள என இ.ஜெயசேகரன் தெரிவித்துள்ளார்.



No comments